search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    புற்றுநோய் என்றால் என்ன... அது எப்படி பரவுகிறது?..
    X

    புற்றுநோய் என்றால் என்ன... அது எப்படி பரவுகிறது?..

    • நம் உடல் கோடிக்கணக்கான உயிரணுக்களால் ஆனது.
    • சில சமயங்களில் உடலில் தேவையற்ற புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன.

    நம் உடல் கோடிக்கணக்கான உயிரணுக்களால் ('செல்'கள்) ஆனது. இந்த உயிரணுக்கள் பிரிந்து வளர்ச்சி அடைந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தேவையான புதிய உயிரணுக்களை உருவாக்குகின்றன. சில சமயங்களில் உடலுக்கு தேவையற்ற புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன. அதேசமயம், உடலில் உள்ள வயதான பழைய உயிரணுக்கள் இறக்க வேண்டிய நேரத்தில் செத்து வெளியேறாமல் உடலிலேயே தங்கிவிடுகின்றன.

    இப்படி புதிதாக உருவாகும் தேவையற்ற உயிரணுக்களும், இறந்து வெளியேறாமல் இருக்கும் உயிரணுக்களும் சேர்ந்து உடலுக்கு கேடு தரும் கட்டியாக (கழலை) உருவெடுக்கின்றன. இப்படி உருவாகும் கட்டி தீங்கு இல்லாத கட்டியாக இருக்கும் பட்சத்தில், அதை உடலில் இருந்து நீக்கிவிடலாம். அப்படி நீக்கிய பின்பு, பெரும்பாலும் அவை மீண்டும் உருவாவது இல்லை.

    ஆனால் சில சமயங்களில் உயிரணுக்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளர்ச்சி அடைந்து மீண்டும் கட்டி உருவாவதோடு, உடம்பின் மற்ற பகுதிகளுக்கும் பரவும். இதைத்தான் புற்றுநோய் என்கிறோம். இதனால்தான் உடலில் ஏதாவது கட்டி இருந்து அதை ஆபரேஷன் செய்து அகற்றினால், அந்த கட்டி சாதாரண கட்டிதானா? அல்லது புற்றுநோய் கட்டியா? என்பதை தெரிந்து கொள்ள டாக்டர்கள் பரிசோதனைக்கு ('பயாப்சி') அனுப்பி வைக்கிறார்கள்.

    உடலின் எந்த பகுதியிலும் புற்றுநோய் வரலாம். அது வரும் இடத்தை பொறுத்து நுரையீரல் புற்றுநோய், இரைப்பை புற்றுநோய் பெருங்குடல் புற்றுநோய், ரத்த புற்றுநோய், தோல் புற்றுநோய் என வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. பெண்களுக்கு பொதுவாக மார்பகம், கர்ப்பப்பை வாய் ஆகிய இடங்களில் புற்று நோய் உண்டாகிறது. இதில் ரத்த புற்றுநோய் தவிர மற்ற புற்றுநோய்களில் பொதுவாக கட்டிகள் தோன்றும்.

    புற்றுநோயின் ஆரம்ப நிலையில் எந்த அறிகுறிகளும் தெரிவது இல்லை. உடலில் கட்டிகள் தோன்றும் ஆரம்ப நிலையில் வலி இருக்காது. ஆனால் நோய் தீவிரம் அடையும் நிலையில் தான், அந்த இடத்தில் வலி தெரியும். அந்த கட்டி புண்ணாகும் பட்சத்தில் அதில் இருந்து ரத்தக்கசிவு ஏற்படலாம். நுரையீரலில் புற்றுநோய் கட்டி இருந்தால் இருமும் போது ரத்தம் வரும்.

    இதேபோல் பெருங்குடலில் புற்றுநோய் கட்டி இருந்தால் மலம் கழிக்கும் போதும், சிறுநீர்ப் பையில் புற்றுநோய் இருக்குமானால் சிறுநீர் கழிக்கும் போதும் ரத்தம் வரலாம். கர்ப்பப்பையில் புற்றுநோய் கட்டி இருந்தால், ரத்தப்போக்கு ஏற்படும்.

    உடலில் உண்டாகும் கட்டிகளில் அதிக அளவில் ஏற்படும் ரத்தப்போக்கு, நீண்ட நாட்களாக இருக்கும் இருமல், காரணம் தெரியாமல் திடீரென்று உடல் எடை குறைதல், மலம் கழிப்பதில் ஏற்படும் சிரமம் ஆகியவை புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகள் ஆகும். ஆனால் எந்த வகையான புற்றுநோய் என்பதற்கு ஏற்ப இந்த அறிகுறிகளும் மாறக்கூடும்.

    எந்த வயதிலும் புற்றுநோய் ஏற்படலாம் என்றபோதிலும், வயதான காலத்தில் புற்றுநோய் தாக்கும் ஆபத்து அதிகம் இருப்பதாக ஆய்வின் மூலம் தெரியவந்து இருக்கிறது.

    புகைப்பிடித்தல், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துதல், உடல் பருமன், தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, எச்.ஐ.வி., ஈரல் அழற்சி மற்றும் சில வகையான தொற்று நோய்கள் புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றன. 22 சதவீத புற்றுநோய்க்கு புகைப்பிடித்தல் மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவது காரணமாக அமைந்து இருப்பதாக ஆய்வில் தெரியவந்து இருக்கிறது.

    இதேபோல் 10 சதவீத புற்றுநோய்க்கு உடல் பருமன், திட்டமிடப்படாத உணவு முறை, அதிக மதுப்பழக்கம் ஆகியவை காரணமாக இருப்பதாகவும், 5 முதல் 10 சதவீத புற்று நோய் மரபு ரீதியாக வருவதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது.

    புகைப்பிடிப்பதையும், புகையிலைப் பொருட்களையும், பதப்படுத்தப்பட்ட இறைச்சி உண்பதையும் தவிர்ப்பது, மது அருந்தாமல் இருப்பது, சூரிய ஒளியில் நீண்ட நேரம் நிற்காமல் இருப்பது, உரிய தடுப்பூசிகளை போட்டு தொற்றுநோய்கள் வராமல் பார்த்துக் கொள்வது, உடல் எடையை சரியான அளவில் வைத்துக் கொள்வது போன்றவற்றின் மூலம் புற்றுநோய் வருவதை தவிர்க்க முடியும்.

    கர்ப்பப்பை வாய் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை உரிய பரிசோதனைகள் மூலம் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் எளிதில் மீண்டுவிடலாம் என டாக்டர்கள் கூறுகிறார்கள்.

    பொதுவாக கர்ப்பப்பை புற்றுநோய் மாதவிடாய் நின்ற 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களையே அதிகம் தாக்குகிறது. குறைந்த வயதில் பருவமடைவது, தாமதமாக திருமணம் செய்து கொள்வது, குழந்தை பிறப்பை தள்ளிப்போட மாத்திரை சாப்பிடுவது, தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்வது ஆகியவை பெண்களிடையே புற்றுநோய் அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

    ஒருவருக்கு வந்துள்ள புற்றுநோய் எந்த வகையானது? அது எந்த இடத்தில் வந்துள்ளது? எந்த நிலையில் இருக்கிறது? அவருக்கு எந்த வகையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது? என்பதை பொறுத்துத்தான் அவரை குணப்படுத்த முடியுமா? இயலாதா? என்பதை சொல்ல முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்.

    இருவருக்கு ஒரே மாதிரியான புற்றுநோய் வந்தாலும் அவர்களில் ஒருவரை குணப்படுத்தவும், மற்றொருவரை குணப்படுத்த முடியாமல் போகும் வாய்ப்பு உள்ளது என்றும், எல்லா புற்றுநோய்களுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்க முடியாது என்றும் ஒவ்வொரு வகைக்குமான சிகிச்சை முறை மாறுபடுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

    நோயாளிக்கு சிறுநீரக விதைப்பை, தைராய்டு சுரப்பி, மார்பகம், தோல் ஆகிய இடங்களில் வரும் புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருக்கும் பட்சத்தில் அதை குணப்படுத்த முடியும் என்றும், கணிசமான ஆண்டுகள் அந்த நபர் உயிர்வாழ முடியும் என்றும் டாக்டர்கள் சொல்கிறார்கள்.

    புற்றுநோயால் ஏற்படும் 50 சதவீத மரணங்களுக்கு நுரையீரல், மூச்சுக்குழாய், பெருங்குடல், கணையம், மார்பகம் ஆகிய இடங்களில் ஏற்படும் புற்றுநோயே காரணமாக உள்ளது.

    கணையத்தில் வரும் புற்றுநோய்தான் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. அந்த இடத்தில் புற்றுநோய் வந்தால் விரைவில் உயிரிழப்பு ஏற்படுவதாகவும், 4 பேரில் ஒருவர் ஒரு மாதத்தில் இறந்துவிடுவதாகவும், 4 பேரில் 3 பேர் ஓர் ஆண்டுக்குள் இறந்துவிடுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×