எதையுமே அவசரப்பட்டு பேசி விடாதீர்கள்- யோகிபாபு

எனக்கு எவ்வளவு பேர் பணம் தர வேண்டும் என்பது தெரியுமா? பட்டியல் தரட்டுமா?இன்னும் சொல்லப்போனால் எனது சம்பளம் என்ன என்று கூட எனக்கு தெரியாது.
எதையுமே அவசரப்பட்டு பேசி விடாதீர்கள்- யோகிபாபு
Published on

சமீபத்தில் நடந்த 'கஜானா' பட விழாவில், நடிகர் யோகிபாபு கலந்து கொள்ளாதது குறித்து தயாரிப்பாளர் ராஜா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. ரூ.7 லட்சம் தராததால் தான் யோகிபாபு படத்தின் புரோமோஷன் விழாவுக்கு வரவில்லை என்று சரமாரியாக குற்றம் சாட்டி பேசியிருந்தார்.

யோகிபாபு குறித்த இந்த விமர்சனம் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் வினீஷ் மில்லெனியம் இயக்கத்தில் தான் கதாநாயகனாக நடித்துள்ள 'ஜோரா கைய தட்டுங்க' பட விழாவில் யோகிபாபு கலந்து கொண்டார். அப்போது தன் மீதான விமர்சனங்கள் குறித்து அவர் வேதனை தெரிவித்தார்.

யோகிபாபு பேசும்போது, "ஒரு பட விழாவுக்கு நான் வராததால் யார் யாரோ, எப்படி எப்படியோ பேசுகிறார்கள். என்னிடம் உதவியாளராக இருந்தவர் படம் எடுக்கிறாரே என்று, அவர் கேட்டுக்கொண்டதால் வெறும் 2 நாட்கள் நடித்துக்கொடுத்தேன். அந்த பட விழாவிற்கு நான் வராததால் காசு கேட்டதாக பேசுகிறார்கள். ஆனால் இது என் படம். அதனால் நான் வந்தேன். இந்த உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.

எனக்கு எவ்வளவு பேர் பணம் தர வேண்டும் என்பது தெரியுமா? பட்டியல் தரட்டுமா? எதையுமே அவசரப்பட்டு பேசி விடாதீர்கள். என்னை பேசுபவர்கள், பேசிக்கொள்ளட்டும். அவர்களை கடவுள் பார்த்துக்கொள்வார். எனது சம்பளத்தை நான் தீர்மானிப்பது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் எனது சம்பளம் என்ன என்று கூட எனக்கு தெரியாது. வெளியே தான் தீர்மானிக்கிறார்கள். நல்ல கதையுடன் தயாரிப்பாளர்கள் வந்தால் நான் எனது சம்பளத்தை குறைத்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com