search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கைதி உடையில் வந்து ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்.. இனி மது குடிக்கமாட்டோம் என உறுதிமொழி
    X

    கைதி உடையில் வந்து ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்.. 'இனி மது குடிக்கமாட்டோம்' என உறுதிமொழி

    • ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் இன்று வெளியானது.
    • இந்த படத்தை காண மதுரை தியேட்டர்களில் ரஜினி ரசிகர்கள் அதிகாலை முதலே ஆர்வத்துடன் குவிந்தனர்.

    நடிகர் ரஜினிகாந்த்தின் 169 திரைப்படமான ஜெயிலர் இன்று ரிலீஸ் ஆனது. மதுரையில் 28 தியேட்டர்களில் ஜெயிலர் திரைப்படம் இன்று காலை 8.30 மணிக்கு முதல் காட்சியுடன் தொடங்கியது. இந்த படத்தை காண மதுரையில் தியேட்டர்களில் ரஜினி ரசிகர்கள் அதிகாலை முதலே ஆர்வத்துடன் குவிந்தனர்.

    மதுரை பெரியார் பஸ் நிலையப் பகுதியில் உள்ள தியேட்டர் முன்பு ரஜினி மன்ற பொறுப்பாளர் பாலதம்புராஜ், துணை செயலாளர் அழகர் உள்ளிட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் ஆர்வமுடன் திரண்டனர் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.


    மதுரையில் தியேட்டரில் ஜெயிலர் படம் பார்க்க சிறைக்கைதி வேடத்தில் வந்த ரசிகர்கள்.

    சுமார் 50 கிலோ எடையுள்ள கேக் வெட்டி ஜெயிலர் படத்தை வரவேற்றனர். முதல் காட்சியை காண ரசிகர்கள் சிலர் சிறை கைதிபோல உடையணிந்து வந்து பரபரப்பு ஏற்படுத்தினர். இதைத்தொடர்ந்து தியேட்டர் வாசலில் இனிமேல் மது அருந்த மாட்டோம் என்று உறுதிமொழியையும் எடுத்தனர்.

    இதையடுத்து அவர்கள் தியேட்டர்களில் ஆர்வத்துடன் சென்று படம் பார்த்தனர். முன்னதாக தியேட்டர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த ரஜினியின் கட்-அவுட்டுகள் மற்றும் புகைப்படங்களுக்கு மாலைகள், பாலாபிஷேகங்கள் செய்து கொண்டாடினர்.

    படம் தொடங்கியதும் ரஜினியின் முதல் அறிமுக தோற்றத்தில் ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள 28 தியேட்டர்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திரைப்படம் சிறப்பாக இருப்பதாகவும், என்றுமே ரஜினி தான் சூப்பர் ஸ்டார் என்றும் ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×