சரத்பாபு மறைவிற்கு நடிகை சுஹாசினி இரங்கல்

நடிகர் சரத்பாபு சின தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சரத்பாபு
சரத்பாபு
Published on

1973-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. இவர் 1977-ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'பட்டின பிரவேசம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கவனம் செலுத்தினார்.இவர் ரஜினிகாந்துடன் முத்து, அண்ணாமலை, போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார். இந்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. மேலும் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சரத்பாபு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததையடுத்து நேற்று காலமானார். இவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையடுத்து இவரது உடல் சென்னை, தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை சுஹாசினி இவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, அவர் கடந்த 92 நாட்களாக மருத்துவமனையில் இருந்தார். அவர் காய்ச்சல் காரணமாக பெங்களூர் சென்றார். ஆனால் அங்கு என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு மாதங்களுக்கு பிறகு தான் அவருக்கு மல்டிபிள் மய்லோமா என்ற நோய் இருப்பதை கண்டறிந்தனர்.

ஐதராபாத்தில் அவருடைய சகோதரர்கள் இருந்ததால் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நானும் சிரஞ்சீவியும் மருத்துவர்களிடம் பேசினோம். அப்போது எங்களால் காப்பாற்ற முடிந்த அளவிற்கு நாங்கள் காப்பாற்றுவோம் என்று கூறினார்கள். ஆனால், அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் முடியாமல் நேற்று சரத்பாபு காலமானார். அவர் வேறு மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவரை தமிழ்நாட்டில் நம்ம குடும்பத்தைச் சேர்ந்தவராக தான் நாம் கவுரவித்துக் கொண்டிருந்தோம். அவர் நடித்த படங்களிலே தமிழ் படங்களில் தான் அதிகம் நடித்திருக்கிறார்.

திரைத்துறையிலே இவ்வளவு மரியாதைக்குரிய எல்லா மொழிகளும் பேசக்கூடிய ஒருவரை நாங்கள் பார்த்ததில்லை என்று தான் கூற வேண்டும். சரத்பாபுவிற்கு நண்பராக இல்லாத ஒருவர் இந்த திரைத்துறையில் இல்லை. அவருக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை. அப்படி இருந்தும் அவருக்கு மல்டிபிள் மய்லோமா என்ற நோய் இருந்தது. இந்த நோய் நான்காவது கட்டத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. முடிந்த அளவிற்கு திரைத்துறையில் எல்லோரும் அவருக்கு உதவ நினைத்தோம். அவரது இழப்பு மிகப்பெரிய இழப்பு தான்" என்று பேசினார்.

நடிகர் சரத்பாபுவின் உடல் இன்று சென்னை, கிண்டியில் மதியம் இரண்டு மணிக்கு தகனம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com