

டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான பராசக்தி படத்தை இயக்கியதற்காக, தனது சம்பளத்தில் 8.39 கோடி ரூபாய் பாக்கித் தொகையை வழங்கும் வரை, இதயம் முரளி படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று இயக்குநர் சுதா கொங்கரா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி மற்றும் அதர்வா முரளி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்த பராசக்தி திரைப்படம், சுதா கொங்கரா இயக்கத்தில் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது.
இந்த படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியதற்காக 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திடம் இருந்து இயக்குநர் சுதா, ரூ.4.12 கோடி பெற்றதாகவும், ஆனால் இந்த உண்மையை சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மறைத்ததாகவும் டான் பிக்சர்ஸ் குற்றம் சாட்டியது.
இயக்குநர் சுதா, பராசக்தி திரைப்படம் இயக்குவதற்காக, 2021 ஆரம்பத்தில் 2டி நிறுவனத்துடன் இணைந்து படம் தயாரிக்க முயன்றபோது அது தடைபட்டது.
இதற்காக இயக்குநர் சுதாவிற்கு ரூ.4.12 கோடி சம்பள பணத்தை 2டி நிறுவனம் வழங்கியது. இதற்கிடையில் டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் ரூ.5.8 கோடி செலுத்தி, 2டி நிறுவனத்திடம் இருந்து பராசக்தி திரைப்படத்தின் உரிமையை வாங்கியது.
இதைத்தொடர்ந்து இயக்குநர் சுதாவிற்கு ரூ.8.5 கோடி சம்பளத்தை டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வழங்கியது.
இந்நிலையில் இதயம் முரளி வெளியீட்டை தடை செய்யக்கோரி இயக்குநர் சுதா, தாக்கல் செய்த மனுவை நீதிபதி கே. குமாரேஷ் பாபு தள்ளுபடி செய்தார். மேலும் நடுவர் மன்றம் மூலம், இதற்கான தீர்வுகளை காணும்படியும் நீதிபதி அறிவுறுத்தினார்.