

உயர் ரக திரைப்பட தயாரிப்பு உபகரணங்களை வாடகைக்கு எடுத்துவிட்டு, அதற்கான பாக்கி தொகையை தரவில்லை எனவும், வாடகை பாக்கியை கேட்க சென்றவரை மிரட்டியதாகவும் நடிகர் ஆர்யா உள்ளிட்ட ‘அனந்தன் காடு’ படக்குழுவைச் சேர்ந்த மூன்று பேர் மீது ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
‘தாஹிர் சினி டெக்’ நிறுவனத்திடம் அனந்தன் காடு படக்குழு டிஜிட்டல் கேமராக்கள், லைட்டிங் செட்டப்புகள் மற்றும் பிற திரைப்பட உபகரணங்களை வாடகைக்கு எடுத்துள்ளது. படப்பிடிப்பிற்காக சினிடெக் நிறுவனமே உபகரணங்களை ஹைதராபாத்திலிருந்து, கேரளாவிற்கும் எடுத்துச் சென்றுள்ளது.
சுமார் ரூ.2.12 கோடிக்கு உபகரணங்களை படக்குழு ஒப்பந்தம் செய்ததாகவும், படம் வெளியான நிலையிலும் தற்போதுவரை ரூ.1.80 கோடிவரை பாக்கித்தொகை வழங்கப்படவில்லை எனவும் நிறுவனம் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படம் வெளியாவதற்குள் தொகையை தந்துவிடுவதாக கூறியதாகவும், ஆனால் தற்போதுவரை தரவில்லை எனவும், கடிதம், வாட்ஸ்அப், தொலைபேசி அழைப்புகள் மூலம் தொடர்புகொண்டும் படக்குழுவினர் சரியாக பதிலளிக்கவில்லை என நிறுவனம் புகாரில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பணம் கேட்டு சென்றபோது நிறுவனத்தின் மேலாளர் ஜாவேத் அலியை தயாரிப்புக்குழுவினர் மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் வினோத், படத் தயாரிப்பு நிறுவனத்தின் பிரதிநிதி கிஷோர் மீது ஜூப்ளி ஹில்ஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.