மத்திய அரசு அறிவித்துள்ள 72-வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமும் இயக்குநருமான தனுஷ் இரட்டை விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.
அவர் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதையும், அவரது அசாத்திய நடிப்பில் வெளியான 'கேப்டன் மில்லர்' திரைப்படம் சிறந்த நடிகருக்கான சிறப்புத் தகுதி விருதையும் பெற்றுள்ளார்.
இந்த சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ் தனது ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் மற்றும் தேசிய விருது நடுவர் குழுவிற்கும் நன்றி தெரிவித்து உணர்வுப்பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஓம் நமசிவாய! 'ராயன்' படத்திற்காக சிறந்த பிராந்திய திரைப்படத்திற்கான தேசிய விருதையும், 'கேப்டன் மில்லர்' படத்திற்காக தேசிய விருதையும் (சிறப்புக் குறிப்பு - சிறந்த நடிகர்) பெற்றிருப்பது எனக்கு மிகுந்த பணிவையும் பெருமகிழ்ச்சியையும் அளிக்கிறது.
மதிப்பிற்குரிய தேசிய திரைப்பட விருதுகள் நடுவர் குழுவிற்கும் தேர்வுக் குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எனது திரைப்பயணம் முழுவதும் எனக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகத் துறையினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
ஒரு நடிகராக இது எனது மூன்றாவது தேசிய விருது, ஒரு இயக்குனராக எனது முதல் தேசிய விருது. எனது பலத்தின் தூண்களான என் ரசிகர்கள் இல்லாமல் இது சாத்தியமாகியிருக்காது.
என் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு நன்றி. 'கேப்டன் மில்லர்' படத்திற்கான இந்த அங்கீகாரம் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது, ஏனென்றால் அதுவே இன்றுவரை எனது மிகச்சிறந்த நடிப்பு என்று நான் எப்போதும் நம்பி வந்திருக்கிறேன்.
நான் மிகவும் போற்றும் ஒரு நடிப்புக்கு சிறப்புக் குறிப்பு பெறுவது, இந்த கௌரவத்தை இன்னும் அர்த்தமுள்ளதாக்குகிறது. மேலும், ஒரு முதல் அனுபவம் எப்போதும் மறக்க முடியாதது.
ராயன் படத்திற்காக இயக்குநராக எனது முதல் தேசிய விருதை வென்றது, நான் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கும் ஒரு வரம்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையின் இறுதியில், மேலும் நான் எப்போதும் சொல்வது போல், "எண்ணம் போல் வாழ்க்கை" மற்றும் "ஹர ஹர மகாதேவ்" எனக் குறிப்பிட்டு, "அன்புடன் D" என்று பதிவை நிறைவு செய்துள்ளார்.