

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "ஆயிரத்தில் ஒருவன்." வெளியான சமயத்தில் இந்தப் படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. எனினும், காலங்கடந்து இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து பலமுறை இந்தப் படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆயிரத்தில் ஒரவன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று கேள்வியும் ரசிகர்கள் நீண்ட காலமாக முன்வைக்கின்றனர். சரியான காலமும், நேரமும் அமைந்தால் ஆயிரத்தில் ஒருவன் 2 உருவாகும் என்று இயக்குநர் செல்வராகவன் பலமுறை தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில், ஆயிரத்தில் ஒருவன் 2 வருமா? என்ற கேள்விக்கு நடிகை ஆண்ட்ரியா சொன்ன பதில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஆண்ட்ரியாவிடம் ஆயிரத்தில் ஒருவன் 2 பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆண்ட்ரியா, "அந்த படம் உருவானாலும் நான் அதில் நடிக்க மாட்டேன்," என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "இயக்குநர் `செல்வராகவன்' உடன் பணியாற்றுவது மிகவும் கடினம், ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக மட்டும் 200 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அந்தப் பட்ததிற்கு பிறகு எனக்கு வந்த மற்ற படங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் எனக்கு எளிமையாக இருந்தது," என்று தெரிவித்தார்.