

கோரிப்பாளையம், மைதானம் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரியான நடிகை ஸ்வாசிகா. ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். தற்போது சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் ‘நூறு சாமி’ படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார்.
இந்த நிலையில், சினிமாவிற்கு வாய்ப்பு தேடும் காலக்கட்டத்தில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை ஸ்வாசிகா வெளிப்படையாக பேசி இருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமாவுக்கு இனி வரவிருக்கும் பெண்களுக்கு நான் சொல்லிக்கொள்வது இதுதான். இந்த அறையில் ஒருவர் தவறாக ஒரு பார்வையை விட்டால் உடனடியாக எதிர்ப்பை காண்பித்து விடவேண்டும். எங்கு நமக்கு எது நடந்தாலும் நாம் தான்குரல் எழுப்பி பேச வேண்டும். சட்டரீதியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பேசினால் குற்றமாகிவிடுமா என்றெல்லாம் நினைத்தால் இன்னும் அதிகமாக நடக்கும் என கூறிய ஸ்வாசிகா அடுத்து சொன்ன தகவல்கள்தான் அதிர்ச்சியூட்டியுள்ளன.
தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த காலக்கட்டத்தில் ஒருவர் தன்னை மேனேஜர் என்று அறிமுகம் செய்து கொண்டு, நீங்கள் 1 லட்சம் ரூபாய் கொண்டு வந்தால் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசையும், லிங்குசாமியையும் சந்திக்க ஏற்பாடு செய்கிறோம். நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார். அந்த வார்த்தையை நம்பிய ஸ்வாசிகா, தனது அம்மாவிடம் பேசி நகையெல்லாம் அடமானம் வைத்து பணத்தை ஏற்பாடு செய்து அவர்கள் சொன்ன ஓட்டலுக்கு போயுள்ளார். ஆனால் அங்கு போன பிறகு தான் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அந்த நபர் குறிப்பிட்டு சொன்ன இயக்குநர்களும் இல்லை, ஸ்வாசிகாவிடம் பேசிய மேனேஜரும் அங்கு இல்லை. அவர்கள் தங்கி இருந்த ஓட்டலுக்கு பணம் கூட கட்டாமல் அங்கிருந்து தப்பித்து ஓடியிருப்பது அப்போது தான் தெரியவந்தது என வேதனையுடன் கூறியுள்ளார்.
பிறகு இந்த ஏமாற்றத்தால் அவருடைய அம்மா, இங்கே நமக்கு மொழி தெரியாது. யாரையும் தெரியாது. இப்படி ஏமாற்றுகிறார்கள். இந்த இடம் நமக்கு சரியாக வராது என்று கூறியுள்ளார். அந்த நேரத்தில் சினிமா கனவை விடலாமா என்கிற அளவுக்கு அவர் மனமுடைந்து இருந்ததாக ஸ்வாசிகா பேசியுள்ளார். ஆனாலும் அந்த ஏமாற்றம் அவரை சினிமாவில் இருந்து வெளியே அனுப்பவில்லை. பல வருடங்கள் சின்னசின்ன கேரக்டர்களில் நடித்து வாய்ப்பு கிடைத்த இடங்களில் தனது திறமையை நிரூபித்து வந்துள்ளார். அதன்பிறகு தான் அவர் நடித்த ‘லப்பர் பந்து’, ‘மாமன்’, ‘கருப்பு’, ‘நூறு சாமி’ போன்ற படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு தனி இடத்தை உருவாக்கி கொடுத்துள்ளன.
இதுகுறித்து அவர் பேசும்போது, தமிழ் ரசிகர்கள் மிகவும் நல்லவர்கள். ஒருவரை பிடித்து விட்டால் அவர்களுக்கு அளவில்லாத அன்பை கொடுப்பார்கள். இன்று நான் இவ்வளவு அன்பை பெறுவதற்கு காரணம் அவர்கள்தான். அதை நினைத்தாலே சந்தோஷமாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல், தன்னுடைய கணவரும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘அழகே அழகு’ சீரியல் நாயகனுமான பிரேம் ஜேக்கப் மீதான அன்பு குறித்தும் வெளிப்படுத்தி உள்ளார்.
சினிமா வாய்ப்புகளுக்காக ஸ்வாசிகா பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தது குறித்து பகிர்ந்து கொண்ட தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பேசுபொருளாகி உள்ளது.