என் மலர்
சினிமா செய்திகள்

போதைப்பொருள் வழக்கில் 2 மலையாள திரைப்பட இயக்குநர்கள் சஸ்பெண்ட் - FEFKA அதிரடி
- கலப்பின கஞ்சாவுடன் 2 இயக்குநர்களை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்.
- வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் 'ஆலப்புழா ஜிம்கானா'. இந்த படத்தை இயக்கியவர் காலித் ரகுமான்.
கேரள சினிமா உலகம் கடந்த சில நாட்களாக நடிகைகள் பாலியல் தொல்லை, போதைப் பொருள் விவகாரம் போன்றவற்றால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இதில் சமீபத்தில் ஒரு ஒட்டலுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனைக்கு சென்ற போது அங்கிருந்த பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ, மாடியில் இருந்து குதித்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கலப்பின கஞ்சாவுடன் 2 இயக்குநர்களை போலீசார் இன்று அதிகாலை கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் மலையாள சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் சமீபத்தில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் 'ஆலப்புழா ஜிம்கானா'. இந்த படத்தை இயக்கியவர் காலித் ரகுமான். அதேபோல் மற்றொரு இயக்குநர் அஷ்ரப் ஹம்சா.இவர் தமாஷா, பீமன்டே வழி, சுலைகா மன்சில் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். இவர்கள் கொச்சியில் உள்ள ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிர் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கதை விவாதத்தில் ஈடுபட்டனர்.
இங்கு இன்று அதிகாலை கலால் துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 இயக்குநர்கள் உள்பட 3 பேர் அங்கு இருந்தனர். அவர்களிடம் போதைப் பொருள் இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இருப்பினும் போலீசார் சோதனையின் போது அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை. இதன் காரணமாக விசாரணைக்கு பிறகு 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் போதைப் பொருளை எங்கிருந்து வாங்கினார்கள்? என்பது குறித்து விசாரணை நடை பெற்று வருகிறது.
இந்நிலையில் கேரள இயக்குநர் சங்கத்தின் தலைவரான சிபி மலயில் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய இரண்டு இயக்குநரான காலித் ரஹ்மான் மற்றும் அஷ்ரஃப் ஹம்ஸாவை திரைத்துறையில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
மேலும் சமீப காலமாக கேரள திரைத்துறையில் அதிகம் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாகி வருவதால் FEFKA திரைச்சங்கள் கடுமையான ஆக்ஷனை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.
இயக்குநர் காலித் ரகுமான், அனுராகா கரிக்கின் வெல்லம், உண்டா, காதல், தள்ளுமாலா போன்ற படங்களையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






