என் மலர்tooltip icon

    மீனம்

    ஆங்கில புத்தாண்டு ராசிப்பலன் 2023

    குருவின் ஆசி பெற்ற மீன ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டில் பல வளமான பலன்கள் நடைபெற நல் வாழ்த்துக்கள். இந்த ஆண்டில் எண்ணற்ற புதிய வாய்ப்புகள் தேடி வரும்.வெளிவட்டாரங்களில் மரியாதைகள் உயரும். கடந்த கால நெருக்கடிகள் குறையும். உங்கள் செயலில் வேகமும், வார்த்தையில் விவேகமும் இருக்கும்.குரு பகவானின் சஞ்சாரம் சற்று சாதகமாக உள்ளது.ஏழரைச் சனி ஆரம்பம். ராகு கேதுக்களால் சற்று ஏற்ற இறக்கமான சூழ்நிலை இருக்கும். எனினும் கடின உழைப்பு லாபத்தை ஈட்டித்தரும். எனவே சுறுசுறுப்புடன் செயல்பட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    குருவின் சஞ்சார பலன்கள்:

    ராசி மற்றும் பத்தாம் அதிபதியான குரு பகவான் ஏப்ரல் 22, 2023 வரை ராசியில் ஆட்சி பலம் பெறுகிறார். அதன் பிறகு தன ஸ்தானம் சென்று ராகுவுடன் இணைந்து சனி பார்வை பெறுகிறார்.ராசி அதிபதி குரு ராகுவுடன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் திடீர் யோகத்தால் எதிர்பாராத பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் நல்ல நிகழ்வுகள் நடைபெறும். எதையும் பல முறை சிந்தித்து செயல்படுவீர்கள். நீண்ட ஆயுள், சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை உயரும். காரிய சித்தி , சமுதாயத்தில் உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு போன்ற யாவும் சிறப்பாக அமையும்.

    அரசு உத்தியோகம், அரசியல் பதவி, அரசு வகை ஆதாயம் உண்டு. சகல சௌபாக்கியங்கள், புகழ், அந்தஸ்து, கவுரவம் என ஒரு மனிதன் வாழ்நாளில் அனுபவிக்க வேண்டிய அனைத்து சுப பலன்களும் தேடி வரும். பங்குச் சந்தையில் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்டம் இவர்களைத் தேடி வரும். புத்திர தோஷம் நீங்கும்.உத்தியோகத்தில் ஸ்திர தன்மை ஏற்படும்.உத்தியோகத்தில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும்.

    தொழில், உத்தியோகம் அல்லது கல்விக்காக வெளிநாட்டு பயணம் செய்ய நேரும். தொழிலுக்காக பூர்வீகத்தை விட்டு பிரிந்த தந்தை மீண்டும் பூர்வீகம் திரும்புவார். சுய உழைப்பால் உருவாகும் சொத்தும் மிகைப்படுத்தலாக இருக்கும். கல்வி நிறுவனங்கள் நடத்தும் ஆர்வம் உண்டாகும். அவரவர் வயதிற்கும் தசாபுத்திக்கும் ஏற்ற சுப பலன்கள் உண்டு. தாய், தந்தை வழியில் உறவினர்கள் ஆதரவு, அனுசரனை உண்டு. சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாட்டு வாழ்க்கை கிடைக்கும். பெரியோர் நட்பு ஆன்மீக, தெய்வீக காரியத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

    சனியின் சஞ்சார பலன்கள்:

    மீனராசிக்கு லாபாதிபதி மற்றும் விரயாதிபதியான சனி பகவான் ஜனவரி 17, 2023 முதல் விரய ஸ்தானத்திற்குச் செல்கிறார். ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. குடும்ப பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். குடும்ப உறவுகளின் உறவு நிலை மேம்படும். தாயிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வாழ்க்கைத் துணை நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்களிடம் கனிவாகவும், கவனமாகவும் பழக வேண்டும். தொழிலில் கூட்டாளிகளால் சாதகமான சூழல் ஏற்பட்டு தனலாபம் அடைவீர்கள்.

    வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துவது புத்திசாலித்தனம். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள், மருத்துவச் செலவு குறையும். பிறர் விசயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. திருமணம் கைகூடும். பொருளாதார நிலை பழக்க வழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். புகழ், அந்தஸ்து

    கெளரவத்துடன் வாழ்வார்கள். தாய்வழி, தந்தை வழிப் பூர்வீகச் சொத்து கிடைக்கும். அளவுக்கு மீறிய கடன், தவறான காதல் , கெட்ட நண்பர்கள் சாகவசம் இன்றி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

    ராகு/கேதுவின் சஞ்சார பலன்கள்:

    வருட துவக்கத்தில் ராகு தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். கேது அஷ்டம ஸ்தானத்தில் நிற்கிறார். அக்டோபர் 30,2023 முதல் ராகு பகவான் ராசிக்குள் வருகிறார். கேது பகவான் ஏழாமிடம் செல்கிறார். வாழ்க்கையில் முன்னேறத் தேவையான சந்தர்ப்பங்கள் கூடி வரும்.பெண்கள் நண்பிகள் மற்றும் உறவுகளுக்கு தங்க நகைகளை இரவல் கொடுக்ககூடாது. ஆபரணச் சேர்க்கை உருவாகும். வேலையாட்களால் உருவாகிய பிரச்சனை சீராகும். வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்பு கிடைக்கும்.

    மனோதிடம் கூடும்.கவுரவமான குடும்பத்தில் பிறந்து நேரம் கெட்டு வேலைக்கு சென்று தவறான காதலில் மாட்டி மனதையும் வாழ்க்கையையும் கெடுக்காமல் மிகவும் கவனமாக காலத்தை கடத்த வேண்டும்.தந்தை வழிச் சொத்து தொடர்பாக உடன் பிறந்தவர்களுடன் சிறு பிணக்கு மன பேதம் தோன்றும். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும்.

    திருமணம்: ஏழரைச் சனிக்கும் திருமணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சுய ஜாதக ரீதியாக ஏதேனும் திருமணத் தடை இருந்தாலும் தடைகள் விலகி திருமண வயதில் உள்ளவர்கள் மணக் கோலம் காண்பார்கள்.

    2-ல் ராகு 8-ல் கேது.இருப்பதால் காதல்,கலப்பு திருமணம் அதிகரிக்கும். அத்துடன் பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும் கலப்பு திருமணமும் அதிகமாகும். மேலும் நின்று போன திருமணங்கள் இனி சுலபமாக நடைபெறும்.

    பெண்கள்: இந்த புத்தாண்டில் உங்கள் செயல்கள் யாவும் வெற்றியாகும். வாழ்க்கையில் நீங்கள் நடக்க வேண்டும் என்று விரும்பும் , அனைத்து சுப திட்டங்கள், ஆசைகள் ,கனவுகளை நடத்தி மகிழ்வீர்கள்.குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன், மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடு மறையும். பிள்ளைகளின் திருமணம் முடிவுக்கு வரும். ஆன்மீக சிந்தனை மேலோங்கும்.

    மாணவர்கள்: உங்கள் ராசி அதிபதி குரு என்பதால் பொதுவாகவே கல்வியில் ஆர்வமாக இருப்பீர்கள்.எதிர்காலம் பற்றிய திட்டமிடுதலுடன் செயல்படுவீர்கள். ஆசிரியர்களின் அறிவுரையுடன் பொதுத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

    பூரட்டாதி 4: கடந்த சில வருடங்களாக ஏற்பட்ட இன்னல்கள் குறையும். தொழில் துறையில் சில புதிய முதலீடுகள் செய்ய ஏற்ற நேரம். சற்று கூடுதலாக உழைக்க நேரும்.

    முன்னேற்றம் கூடும். சிலர் வீட்டு மனை அல்லது புதிய வாகனம் வாங்குவீர்கள். முக்கிய முடிவுகளை பெரியவர்களை கலந்து ஆலோசிப்பது சிறப்பு. சிலருக்கு பதவி மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம். சிலர் ரிலாக்ஸாக மன மாற்றத்திற்காக சொந்த ஊர் சென்று உற்றார் உறவுகளைக் கண்டு வரலாம். தந்தை வழி உறவுகளிடம் முக்கிய பேச்சு வார்த்தையை நடத்த ஏற்ற காலம். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அழகு, ஆடம்பர பொருட்கள் விற்கும் சில்லறை வியாபாரிகளுக்கு வியாபாரம் அமோகமாக இருக்கும்.

    தாய், தந்தை உடன் பிறப்புகளுடன் கூடி மகிழ்வீர்கள். முதலீடு இல்லாத கமிஷன் அடிப்படையான புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். அதன் முலம் நல்ல வருவாயும் கிடைக்கும். பணம் பைகளில், கைகளில் நிரம்பி வழியும். கோபூஜை மற்றும் கோதானம் எதிர்பார்த்த மாற்றத்தை கிடைக்கச் செய்யும்.

    உத்திரட்டாதி: பங்குச் சந்தை முதலீட்டால் ஆதாயம் உண்டு. ஊடகங்களில் பணி புரிபவர்களுக்கு புகழ் உண்டாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு ஓங்கும். விவசாயிகளுக்கு ஆதாயம் உண்டு. சுய தொழிலுக்கு முயற்சிப்பவர்களுக்கு தேவையான உதவி வாழ்க்கைத் துணையின் மூலம் கிடைக்கும். குலத் தொழில் விருத்தியடையும். நெருங்கிய உறவில் திருமண முயற்சி கைகூடும். வீடு, மனை தொடர்பாக நீங்கள் எதிர்பார்த்த நற்செய்திகள் உங்களை திக்கு முக்காடச் செய்யும். வாரிசுகள் கல்வி, வேலை விசயமாக இடம் பெயர நேரும். சிலருக்கு மருத்துவம் சம்பந்தமான உயர்கல்வியில் சேர வாய்ப்பு உள்ளது. புத்திர பாக்கியம் உண்டாகும். பராம்பரிய விவசாயிகள் நல்ல ஏற்றம் பெறுவார்கள். புதிய இன்சூரன்ஸ் பாலிஸி எடுப்பீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை சீராகும். வேலை விஷயமாக பிரிந்திருந்தவர்கள் மீண்டும் குடும்பத்தோடு ஒன்று சேருவார்கள். மகான்களை சந்தித்து ஆசி பெறவும்.

    ரேவதி: உங்கள் எண்ணங்கள், யோசனைகள், சிந்தனைகள் அனைத்தும் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும். பல புதிய மாற்றங்கள் உண்டாகும். நிதி, நிர்வாகத்தை நன்கு திடப்படுத்திக் கொள்வீர்கள். புதிய வெளிநாட்டு தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். பங்குதாரர் மூலம் புதிய தொழில் முதலீடு உண்டாகும். சேமிப்பு உயரும். ஒரு சிலர் அசைவ உணவிலிருந்து சைவ உணவுக்க மாறுவார்கள். அரசு வேலைக்கு முயற்சி செய்யும் எண்ணம் உண்டாகும். வயோதிகர்களுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கும். பெண்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

    தொழில் வகையில் அரசு அதிகாரிகளை அனுசரித்து ஆதாயம் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக உங்கள் எதிர்பார்ப்பிற்கு கிடைக்காத வரன் இப்பொழுது தேடி வரும். சில விவாகரத்து தம்பதிகள் மீண்டும் சேரும் வாய்ப்பு வரும். சிலரது வாரிசுகளுக்கு திருமண யோகம் உண்டாகும். பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சையில் மூத்த சகோதரத்தின் ஆதரவு மகிழ்ச்சியைத் தரும். தினமும் கால பைரவரை வழிபடவும்.

    மீன ராசியினர் ஆங்கிலப் புத்தாண்டிற்கு சென்று வழிபட வேண்டிய ஸ்தலம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில். ஏழரைச் சனி துவங்க உள்ளதால் மீன ராசியினர் இங்கு சென்று வழிபட சனி பகவானால் ஏற்படும் இன்னல்கள் தீரும்.

    ×