search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளால் உதய் கோடக் சுமார் ரூ.10,831 கோடியை இழந்துள்ளார்
    X

    ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளால் உதய் கோடக் சுமார் ரூ.10,831 கோடியை இழந்துள்ளார்

    • கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை
    • ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது

    கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கவும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

    2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட திருத்த நடவடிக்கை விதிமுறைகளை தனது ஐடி கட்டமைப்பில் கடைபிடிக்க கோடக் மஹிந்திரா வங்கி தவறியுள்ளது.

    ஆகவே தகவல் பாதுகாப்பு குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    ரிசர்வ் வங்கியின் இந்த தடையால் தற்போது இவ்வங்கி வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்களின் பணம், வாடிக்கையாளர்களின் சேவை ஆகியவற்றில் எவ்விதமான பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆனாலும், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது. காரணம் இவ்வங்கி தனது பெரும்பாலான புதிய வாடிக்கையாளர்களை ஆன்லைன் வாயிலாகவும், மொபைல் சேவை வாயிலாக தான் பெறுகிறது.

    இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 13% வரை சரிவை கண்டுள்ளது.

    இதன்மூலம், கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனரான உதய் கோடக் தனது சொத்து மதிப்பில் சுமார் 10,831 கோடி ரூபாயை இழந்துள்ளார். நேற்றைய நிலவரப்படி அவரிடம் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருந்தது என ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×