தமிழ்நாடு

இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்- மு.க.ஸ்டாலின்

Published On 2024-04-24 09:24 GMT   |   Update On 2024-04-24 09:28 GMT
  • திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது.
  • கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருகிறது.

டெல்லி, ஜவஹர் பவன் உள்ள சமாஜிக் நியாயக் சம்மேளனத்தில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் மாநாடு நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டிற்கு வாழ்த்து கூறி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. ஓபிசி, எஸ்சி/எஸ்டி மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இடஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது.

தமிழ்நாட்டில் தற்போது ஓபிசிஎஸ், எஸ்சி/எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கபட்டுள்ளது.

மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியல் சாதியினருக்கும் இடஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

ஓபிசி மற்றும் எஸ்சி/எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்"

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

Tags:    

Similar News