search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: ஆப்கானிஸ்தான் ராணுவ மந்திரி - தளபதி ராஜினாமா
    X

    தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: ஆப்கானிஸ்தான் ராணுவ மந்திரி - தளபதி ராஜினாமா

    ஆப்கானிஸ்தான் நாட்டின் ராணுவ தளத்தின் மீது தலிபான் தீவிரவாதிகளின் கோரத்தாண்டவத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ள நிலையில் அந்நாட்டின் ராணுவ மந்திரி மற்றும் ராணுவ தலைமை தளபதி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் தலிபான் தீவிரவாதிகளுடன் போரிட்டு வரும் வடக்கு ஆப்கானிஸ்தானின் குன்டுஸ் பகுதி பிராந்திய ராணுவ தலைமையகம் ஒன்றுள்ளது. மஸார்-இ-ஷரிப் என்ற இடத்தில் அமைந்துள்ள ராணுவ தளத்துக்குள் பணியாற்றி வரும் வீரர்கள் அந்த வளாகத்தில் இருக்கும் மசூதிக்குள் கடந்த 21-ம் தேதி ஜும்மா தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, ராணுவ சீருடை அணிந்தபடி சில வாகனங்களுடன் அந்த முகாமுக்குள் நுழைந்த தலிபான் தீவிரவாதிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இயந்திர துப்பாகிகளால் சுட்டும், சிறிய ராக்கெட்களை ஏவியும், உடல்களில் கட்டிவந்த வெடி குண்டுகளை வெடிக்கச் செய்தும் ஆவேச தாக்குதல் நடத்தினர்.

    இந்த கொடூர தாக்குதலில் ஆப்கானிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த சுமார் 50 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பலர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி, பலி எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த கொலைவெறி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி, மஸார்-இ-ஷரிப் ராணுவ தளத்தின்மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சோகத்தில் எங்களது பிரார்த்தனையும் இணைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


    இந்த நிலையில், தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலை தடுக்க தவறியதற்கு தார்மீக பொறுப்பேற்று ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவ மந்திரி அப்துல்லா ஹபிபி மற்றும் ராணுவ தலைமை தளபதி கடாம் ஷா ஷமிம் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

    அவர்களின் ராஜினாமாவை அதிபர் அஷ்ரப் கானி ஏற்றுக் கொண்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×