search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணத்தில் பணத்தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை
    X

    கும்பகோணத்தில் பணத்தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை

    கும்பகோணத்தில் பணத்தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டீஸ்வரம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சகாஜி நாயக்கன் தோப்பு பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் மகன் விக்ரம் (வயது28). இவர் பாலக்கரை அருகே இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை விக்ரம் தனது நண்பர்கள் பாரதிதாசன்(28), செல்வகணபதி(26) ஆகியோருடன் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளில் கும்பகோணம் கோதண்டபாணி தெரு அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த 2 பேர் விக்ரமை வழி மறித்தனர். அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் விக்ரமை சரமாரியாக வெட்டினர். அதை தடுக்க முயன்ற அவரது நண்பர்களையும் அந்த கும்பல் வெட்டினர். விக்ரமிற்கு முகம், மார்பு உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. இதில் விக்ரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து கொலை நடந்த பகுதிகளில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டன.

    இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, ராமமூர்த்தி, ரமேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்ரமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயம் அடைந்த விக்ரமின் நண்பர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். அவர் கொலையாளிகளை பிடிக்க கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் விக்ரமை பணத்தகராறில் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கும்பகோணம் கோதண்டபாணி தெருவை சேர்ந்த அண்ணன்-தம்பியான 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர். இந்த சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×