search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணவேணி
    X
    கிருஷ்ணவேணி

    கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் பிரசவத்தில் இளம்பெண் மரணம்: ஆர்.டி.ஓ. விசாரணை

    கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் பிரசவத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.
    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள குமாரகிரிபுதூரை சேர்ந்தவர் விக்னேசுவரன் என்ற சங்கர் (வயது 35). நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் குருசாமி மகள் கிருஷ்ணவேணி(28). பி.எஸ்சி. நர்சிங் படித்தவர். இவருக்கும், சங்கருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மகேந்திரன்(4) என்ற மகன் உள்ளான்.

    இந்நிலையில் கிருஷ்ணவேணி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் இரவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். நேற்று காலை 6 மணி அளவில் கிருஷ்ணவேணிக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகான பெண் குழந்தை பிறந்தது.

    பின்னர் சிறிது நேரத்தில் கிருஷ்ணவேணியின் உடல்நிலை திடீரென மோசம் அடைந்து அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எனவே அவரை மேல் சிகிச்சைக்காக வேறு ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் ஏற்பாடு செய்தனர். ஆம்புலன்சில் ஏற்றுவதற்காக கிருஷ்ணவேணியை தூக்குப் படுக்கை (ஸ்டிரெச்சர்) மூலம் கொண்டு வந்தபோது அவர் இறந்து விட்டார். இதனால் அவருடைய உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஆஸ்பத்திரியில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால்தான் கிருஷ்ணவேணி உயிரிழந்தார் என்று கூறி அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் முருகதாஸ் மற்றும் போலீசார் அந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

    போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போலீசார் கிருஷ்ணவேணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 5 ஆண்டிலேயே கிருஷ்ணவேணி இறந்திருப்பதாலும், அவரது சாவில் மர்மம் இருப்பதாக புகார் கூறப்பட்டிருப்பதாலும் கோவில்பட்டி ஆர்.டி.ஓ. கண்ணபிரான் இன்று விசாரணை நடத்தினார்.

    அவர் கிருஷ்ணவேணியின் குடும்பத்தினர் மற்றும் அவருக்கு பிரசவம் நடந்த தனியார் ஆஸ்பத்திரியில் விசாரணை மேற்கொண்டார்.
    Next Story
    ×