search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரகசிய வாக்கெடுப்பு கோரிய வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்
    X

    ரகசிய வாக்கெடுப்பு கோரிய வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்

    சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி மீண்டும் மெஜாரிட்டியை நிரூபிக்க கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.
    மதுரை:

    தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் எம்.எல்.ஏ.க்கள் தன்னிச்சையான முறையில் முடிவு எடுக்கவில்லை. அவர்கள் சிறை வைக்கப்பட்டு இருந்தனர். சசிகலா, தினகரன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டில் இருந்தனர்.

    எனவே ரகசிய வாக்கெடுப்பு நடத்தி இருந்தால் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றிருக்க முடியாது.

    தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பை வலியுறுத்தின. ஆனால் சபாநாயகர் மறுத்துவிட்டார். தமிழகத்தில் இதேநிலை நீடித்தால் சிறைச்சாலையில் இருந்து வரும் உத்தரவு தான் செயல்படுத்தப்படும். குற்றவாளி ரிமோட் மூலம் அரசு நிர்வாகத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.

    எனவே சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என்று அறிவித்து, மீண்டும் சட்டசபையை கூட்டி ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கடந்த 18-ந்தேதி சட்டசபை தலைவர், செயலாளர், கவர்னர் உள்ளிட்டவர்களுக்கு இ-மெயிலில் மனு அனுப்பினேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து சட்ட சபையை கூட்டி ரகசிய வாக்கெடுப்பு நடத்தி இந்த அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனியின் மகன் ஆணழகன் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு இன்று (புதன் கிழமை) நீதிபதிகள் செல்வம், கலையரசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு கூடுதல் வக்கீல் மணி சங்கர் ஆஜராகி, இந்த வழக்கை இங்கு தொடர முடியாது. ஏற்கனவே இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டு முதன்மை அமர்வில் விசாரணையில் உள்ளது. எனவே இந்த வழக்கையும், அதோடு சேர்தது விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்றனர்.

    இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆணழகன் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு மாற்றி உத்தரவிட்டனர்.
    Next Story
    ×