search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா அணி பக்கம் சாய்ந்த புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்:  எடப்பாடி பழனிச்சாமியுடன் சந்திப்பு
    X

    சசிகலா அணி பக்கம் சாய்ந்த புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்: எடப்பாடி பழனிச்சாமியுடன் சந்திப்பு

    தமிழக முதல்- அமைச்சராக பதவி ஏற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. தமிழக முதல்-அமைச்சராக இருந்த பன்னீர் செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.

    அவருக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேரும், 12 எம்.பி.க்களும் ஆதரவு தெரிவித்தனர். மேலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

    இதற்கிடையே புதுவை அ.தி.மு.க.விலும் பிளவு ஏற்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ஓம்சக்தி சேகருக்கு ஆதரவாக மாநில நிர்வாகிகள் ஒரு பிரிவினரும், தொகுதி நிர்வாகிகளும் கூண்டோடு வெளியேறினார்கள்.

    ஆனால், புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எந்த அணிக்கும் செல்லாமல் அமைதி காத்து வந்தனர். இதேபோல் புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் புருஷோத்தமனும் மவுனம் சாதித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை தமிழக முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றார். அவரது பதவி ஏற்பு விழாவில் புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் புருஷோத்தமன், கோகுலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.

    புதிதாக முதல்-அமைச்சராக பதவி ஏற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கும், அமைச்சர்களுக்கும் அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதன் மூலம் புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது தெரியவந்துள்ளது.

    Next Story
    ×