search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் வெடி விபத்தில் 2 பேர் காயம்: பட்டாசு குடோனுக்கு சீல் வைப்பு
    X

    புதுவையில் வெடி விபத்தில் 2 பேர் காயம்: பட்டாசு குடோனுக்கு சீல் வைப்பு

    புதுவையில் வெடிவிபத்தில் 2 பேர் காயமடைந்ததை தொடர்ந்து, தீ விபத்து குறித்து விசாரணை நடத்திய சப்-கலெக்டர் உதயகுமார் பட்டாசு தொழிற்சாலை குடோனுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.
    திருக்கனூர்:

    திருக்கனூரை அடுத்த கே.ஆர். பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). கூனிச்சம்பட்டு இருளர் குடியிருப்பு பகுதி அருகே உரிமம் பெற்று பட்டாசு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட கலசம் பட்டாசின் செயல்பாடு குறித்து சோதனை செய்யும் பணியில் 2 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு, சோதனைக்காக தயாரித்து வைக்கப்பட்டு இருந்த கலசங்கள் அனைத்தும் வெடித்து சிதறியது. இதில், சோதனையில் ஈடுபட்ட முனுசாமி, மகேந்திரன் ஆகியோருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. இருவருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த வில்லியனூர் சப்-கலெக்டர் உதயகுமார், தாசில்தார் மாத்யூஸ் பிரான்சிஸ், திருக்கனூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் நியூட்டன், குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.

    இதனைத்தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலை குடோனுக்கு சீல் வைக்க சப்-கலெக்டர் உதயகுமார் உத்தரவிட்டார். இதனையடுத்து பட்டாசு குடோனுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.
    Next Story
    ×