search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தவான், லோகேஷ் ராகுல் அரைசதம்: 4-வது நாள் முடிவில் இந்தியா 171/1; 49 ரன்கள் முன்னிலை
    X

    தவான், லோகேஷ் ராகுல் அரைசதம்: 4-வது நாள் முடிவில் இந்தியா 171/1; 49 ரன்கள் முன்னிலை

    கொல்கத்தா டெஸ்டில் முதல் இன்னிங்சில் 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்த இந்தியா, 2-வது இன்னிங்சில் தவான், லோகேஷ் ராகுல் ஆட்டத்தால் 49 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 16-ந்தேதி (வியாழக்கிழமை) போட்டி தொடங்கியது. மழை குறுக்கிட்டதால் அன்றைய தினம் 11.5 ஓவர்களே வீசப்பட்டது. ஆடுகளத்தில் புற்கள் அதிக அளவில் காணப்பட்டதாலும், நாள்முழுவதும் மேகமூட்டமாக இருந்ததாலும் வேகப்பந்து வீச்ச்சுக்கு அதிக அளவில் ஆடுகளம் ஒத்துழைத்தது.

    இதனால் இந்தியா 17 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது. 2-வது நாள் ஆட்டத்தின்போதும் மழை குறுக்கீட்டது. இதனால் 21 ஓவர்களே வீசப்பட்டது. இந்தியா 2-வது நாள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்திருந்தது.

    நேற்றைய 3-வது நாள் ஆட்டம் முழுமையான நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய இந்தியா 172 ரன்னில் ஆல்அவுட் ஆனது. புஜாரா 52 ரன்கள் சேர்த்தார். இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் லக்மல் நான்கு விக்கெட்டுக்களும், காமகே, ஷனகா மற்றும் தில்ருவான் பெரேரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி மேத்யூஸ் (52), திரிமன்னே (51) ஆகியோரின் அரைசதத்தால் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்திருந்தது. சண்டிமல் 13 ரன்னுடனும், டிக்வெல்லா 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்றைய 3-வது நாளில் 72.2 ஓவர்கள் வீசப்பட்டன.



    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது சண்டிமலும், டிக்வெல்லாவும் ஆட்டத்தை தொடர்ந்தனர். இன்றைய தினத்தில் மொகமது ஷமி அபாரமாக பந்து வீசினார். இன்-ஸ்விங், அவுட்-ஸ்விங் என கலக்கினார். டிக்வெல்லாவை 35 ரன்னிலும், சண்டிமலை 28 ரன்னிலும் அவுட்டாக்கினார். அடுத்து வந்த ஷனகா 0 ரன்னிலும், பெரேரா 5 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

    இலங்கை அணி ஒரு கட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்திருந்தது. 9-வது வீரராக களம் இறங்கிய ஹெராத் 67 ரன்கள் சேர்க்க இலங்கை 294 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. ஹெராத் ஆட்டத்தால் இலங்கை அணி கடைசி 3 விக்கெட்டில் 93 ரன்கள் சேர்த்தது. இலங்கை முதல் இன்னிங்சில் இந்தியாவை விட 122 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    122 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய ஆட்டத்தில் நேரம் ஆகஆக ஆடுகளம் பேட்டிங் செய்ய அதிக அளவில் ஒத்துழைத்தது. இதனை இந்தியா சரியாகப் பயன்படுத்தியது. லோகேஷ் ராகுல், தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் இன்னிங்சில் அச்சுறுத்திய இலங்கை பந்து வீச்சாளர்களால் 2-வது இன்னிங்சில் நெருக்கடி கொடுக்க முடியவில்லை.

    லோகேஷ் ராகுல், தவான் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். இந்த ஜோடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தியது. இருவரும் அடுத்தடுத்து அரைசதங்கள் அடித்தனர்.

    லோகேஷ் ராகுல் 65 பந்தில் 7 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். தவான் 74 பந்தில் 7 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்தபின் தவான் அதிரடி ஆட்டத்தை கையாண்டார். இதனால் இந்தியாவின் ஸ்கார் மளமளவென உயர்ந்ததுடன், தவானும் சதத்தை நெருங்கினார். துரதிருஷ்டவசமாக 94 ரன்கள் எடுத்த நிலையில் ஷனகா பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    தவான் அவுட்டாகும்போது இந்தியா 37.1 ஓவரில் 166 ரன்கள் எடுத்திருந்தது. அரைசதம் அடித்த பின்னர் தவான் 42 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார். இவரது ஸ்கோரி 11 பவுண்டரிகள், 2 சிக்சர்ஸ் அடங்கும்.



    அடுத்து லோகேஷ் ராகுல் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். போதிய வெளிச்சமின்மை காரணமாக இந்தியா 39.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்திருக்கும்போது 4-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்படுவதாக நடவர்கள் அறிவித்தனர். லோகேஷ் ராகுல் 73 ரன்னுடனும், புஜாரா 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை 49 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    நாளைய கடைசி நாள் ஆட்டம் காலை 9.15 மணிக்கு தொடங்கும். இந்தியா உணவு இடைவேளை வரை விளையாடி, அதன்பின் ஒரு மணி நேரம் பேட்டிங் செய்து, இலங்கை அணி வெற்றிக்கு சுமார் 250 ரன்கள் இலக்கு நிர்ணயித்தால் கொல்கத்தா டெஸ்டில் பரபரப்பு ஏற்படும்.
    Next Story
    ×