search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கெதிரான போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி வெற்றி: தொடரை சமன் செய்தது
    X

    தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கெதிரான போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி வெற்றி: தொடரை சமன் செய்தது

    தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கெதிரான 2-வது நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.
    இந்தியா ‘ஏ’ - தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டி கடந்த 19-ந்தேதி தொடங்கியது.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 322 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் குக் (98), மார்கிராம் (74), ரமேலா (51) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்தியா ‘ஏ’ அணி சார்பில் நதீம் 4 விக்கெட்டும், சாய்னி 3 விக்கெட்டும், கவுதம் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ‘ஏ’ அணி சாம்ராத் (77), சட்டர்ஜீ (46), ஷ்ரேயாஸ் அய்யர் (65) ஆகியோரின் ஆட்டத்தால் 276 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    முதல் இன்னிங்சில் 46 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 2-வது இன்னிங்சில் 177 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் குக் மட்டும் அதிகபட்சமாக 70 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி சார்பில் ராஜ்பூட் மற்றும் நதீம் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், கவுதம் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் சேர்த்து தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 223 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. இதனால் இந்தியா ‘ஏ’ அணியின் வெற்றிக்கு 224 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

    224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணி 4 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர் சாம்ராத் (55), கேப்டன் கருண் நாயர் (90) அணியின் வெற்றிக்கு உதவினர்.

    இந்த வெற்றியின் மூலம் இந்தியா ‘ஏ’ அணி இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது. ஏற்கனவே நடந்த முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×