search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து தொடருக்கு முன்னோட்டம்: ரஞ்சி டிராபியில் விளையாடுகிறார் இசாந்த் சர்மா
    X

    இங்கிலாந்து தொடருக்கு முன்னோட்டம்: ரஞ்சி டிராபியில் விளையாடுகிறார் இசாந்த் சர்மா

    சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இசாந்த் சர்மா இங்கிலாந்து தொடருக்கு முன்னோட்டமாக ரஞ்சி டிராபியில் விளையாடி உடற்தகுதியை நிரூபிக்க உள்ளார்.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மா. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த மாதம் கான்பூரில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாள் இசாந்த் சர்மா காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

    அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது இசாந்த் சர்மா சிக்குன்குனியா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் நியூசிலாந்து தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.

    அவர் இல்லாத நிலையில் மொகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் சிறப்பாக பந்து வீசினார்கள். இதனால் அடுத்து வர இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம்பெற வேண்டுமென்றால் அவர் தனது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதனால் தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளார்.

    இசாந்த் சர்மா ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காக விளையாட இருக்கிறார். வியாழக்கிழமை டெல்லி அணி கர்நாடகா அணியுடன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இதற்காக இசாந்த் சர்மா அணி வீரர்களுடன் இன்று கொல்கத்தா புறப்பட்டுச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணியில் இடம்பிடித்திருந்த கவுதம் காம்பீர் அணிக்கு திரும்பியுள்ளார். இதேபோல் தவானும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக இந்திய அணியில் விளையாடாத தவான், ரஞ்சி டிராபியில் கர்நாடகாவிற்கு எதிராக களம் இறங்குவரா? என்பது சந்தேகம்தான்.
    Next Story
    ×