search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைசி பந்தை தவறாக அடித்துவிட்டேன் - கேப்டன் டோனி
    X

    கடைசி பந்தை தவறாக அடித்துவிட்டேன் - கேப்டன் டோனி

    வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் பிராவோ வீசிய கடைசி பந்தை தவறாக அடித்துவிட்டதாக இந்திய அணி கேப்டன் டோனி கூறியுள்ளார்.
    லாடெர்ஹில்:

    அமெரிக்காவில் இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டு 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டம் நேற்று லாடெர்ஹலில் நடந்தது.

    முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245 ரன் குவித்தது. அந்த அணி வீரர் லிவிஸ் 48 பந்தில் சதம் அடித்தார்.

    ஜான்சன் சார்லஸ் 79 ரன் எடுத்தார். கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரகானே (7 ரன்), விராட்கோலி (16) ஏமாற்றம் அளித்தனர்.

    ரோகித் சர்மா-லோகேஷ் ராகுல் ஜோடி அதிரடியாக விளையாடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது. இதனால் ரன் மளமளவென்று ஏறியது. ரோகித் சர்மா 62 ரன்னில் அவுட் ஆனார்.

    அடுத்து களம் வந்த கேப்டன் டோனி அதிரடியாக விளையாடினார். லோகேஷ் ராகுல் 46 பந்தில் சதம் அடித்து அசத்தினார். இதனால் இலக்கை நோக்கி இந்தியா சென்றது. வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ரன் தேவைப்பட்டது. பிராவோ வீசிய அந்த ஓவரில் முதல் 5 பந்தில் 6 ரன் எடுத்தார்.

    கடைசி பந்தில் 2 ரன் தேவை என்ற நிலையில் அதை எதிர்கொண்ட டோனி அவுட் ஆனார். இதனால் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தோல்வி குறித்து கேப்டன் டோனி கூறியதாவது:-

    இது ஒரு அற்புதமான ஆட்டம். கடைசி பந்தை சரியாக கணித்தேன். ஆனால் அதை செயல்படுத்துவதில் தவறு செய்துவிட்டேன். நாம் செயல்படுத்தும் விதம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.

    நாங்கள் பலவற்றை சரியாகவே செய்தோம். நல்ல பார்ட்னர் ஷிப்பும், ஓவருக்கு 12 ரன் வீதம் எடுத்தோம். அனைவரும் நன்றாக பேட்டிங் செய்தனர். ஏனென்றால் 250 ரன் இலக்கை சேசிங் செய்வது எளிதானதல்ல. வெற்றி பெற்று இருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும் என்றார்.

    கடைசி ஓவரை வீசிய வெய்ன் பிராவோ கூறுகையில், கடைசி கட்டத்தில் டோனி என்ன செய்வார் என்பதை அறிவோம். கடைசி பந்தை மெதுவாக வீச முடிவு செய்தேன். டோனி முன்னேறி வருவதை பார்த்ததும் மெதுவாக வீசினேன். அதற்கு பலன் கிடைத்தது என்றார்.

    2-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
    Next Story
    ×