search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடியோ: ஓடும் ரெயிலில் ஏற முயன்று கீழே விழுந்த வாலிபரை காப்பாற்றிய பாதுகாப்பு படை வீரர்கள்
    X

    வீடியோ: ஓடும் ரெயிலில் ஏற முயன்று கீழே விழுந்த வாலிபரை காப்பாற்றிய பாதுகாப்பு படை வீரர்கள்

    மும்பையில் இன்று ரெயிலில் ஏற முயன்றபோது கீழே விழுந்த வாலிபரை, ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றினர்.
    மும்பை:

    மும்பை பரேல் ரெயில் நிலையத்தின் மூன்றாவது பிளாட்பாரத்தில் இன்று காலை 8.50 மணியளவில் ஒரு புறநகர் ரெயில் புறப்பட்டுச் சென்றது. ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்தபோது ஒரு வாலிபர் அவசரம் அவசரமாக ஓடிச்சென்று ஒரு பெட்டியில் ஏறினார். ஆனால், கால் தவறி அவர் விழுந்துவிட்டார். அவர், ரெயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் சிக்கிக்கொண்டார்.

    அப்போது பிளாட்பாரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை கான்ஸ்டபிள்கள், அந்த வாலிபரை கண்ணிமைக்கும் நேரத்தில் வெளியே இழுத்தனர். இதனால், அந்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்.

    மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர்பிழைத்த அந்த வாலிபர் டோம்பிவிலி பகுதியைச் சேர்ந்த வினோத் லட்சுமணன் என்பது விசாரணையில் தெரியவந்தது. லேசான காயமடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் முழுவதும் பிளாட்பாரத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோவை ரெயில்வே பாதுகாப்பு படை வெளியிட்டுள்ளது. ஓடும் ரெயிலில் ஏறுவது எவ்வளவு அபாயகரமானது என்பதை உணர்த்தும் வகையில், இந்த வீடியோ பதிவு உணர்த்துகிறது.
    Next Story
    ×