search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா நாட்டுக்காக போராடி சிறைக்கு வரவில்லை: கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி பேட்டி
    X

    சசிகலா நாட்டுக்காக போராடி சிறைக்கு வரவில்லை: கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி பேட்டி

    சசிகலா நாட்டுக்காக போராடி சிறைக்கு வர வில்லை, எனவே அவருக்கு கூடுதல் பாதுகாப்பு எதுவும் இல்லை என்று சிறைத்துறை டி.ஜி.பி கூறினார்.

    பெங்களூர்:

    சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சலுகை வழங்கப்படுகிறதா? எப்படி இருக்கிறார்? என்பது குறித்து கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி சத்திய நாராயணராவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    சசிகலாவுக்கு மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுதான் வழங்கப்படுகிறது. மற்ற கைதிகளுக்கு எந்தநேரத்தில் உணவு வழங்கப்படுகிறதோ அதே நேரத்தில் தான் சசிகலாவுக்கும் உணவு வழங்கப்படுகிறது. அவர் நன்றாக இருக்கிறார். மிகவும் அமைதியாக காணப்படுகிறார்.

    இங்கு எல்லா கைதிகளும் குற்றவாளிகள் தான். யாருக்கும் சிறப்பு சலுகை அளிக்கப்படவில்லை. தினமும் காலையில் புளிசாதம், உப்புமா, அவல்சாதம், எலுமிச்சை சாதம் ஆகிய வையும், மதியம் கேழ்வரகு களி, சோறு, சப்பாத்தி, இரவில் சப்பாத்தி, களி ஆகியவை வழங்கப்படுகின்றன.

    வாரம் ஒருமுறை மட்டனும் சிக்கனும் வழங்கப்படும். ஒரு நாளைக்கு ஒரு முறை டீ, காபியும் வழங்கப்படுகிறது.

    பெங்களூர் மத்திய சிறையை பொறுத்தவரை ‘ஏ’ கிளாஸ், ‘பி’ கிளாஸ் என எந்த வித்தியாசமும் இல்லை. சசிகலாவுக்கு எந்த சிறப்பு அறையும் வழங்கப்படவில்லை. மற்ற கைதிகளுக்கு வழங்கப்படுவதைப் போல சாதாரண அறையே ஒதுக்கப்பட்டுள்ளது.

    சசிகலா தரையில்தான் படுத்து தூங்குகிறார். குளிர் அதிகமாக இருப்பதால் கூடுதலாக 2 போர்வைகள் வழங்கப்பட்டுள்ளன. கைதிகள் மனஉளைச்சலுக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதற்காக மற்ற கைதியுடன் தங்க வைக்கப்படுவார்கள். சசிகலா கேட்டுக் கொண்டதால் அவருடன் இளவரசி மட்டும் தங்கியுள்ளார்.

    பெங்களூர் சிறையில் 200க்கும் குறைவான பெண் கைதிகளே இருக்கிறார்கள். பாதுகாப்புக்காக 3 பெண் கண்காணிப்பாளர்கள் இருக்கிறார்கள். ஏதேனும் பிரச்சினை இருந்தால் அவர்களிடம் தெரிவிக்கு மாறு சொல்லி இருக்கிறேன்.

    மற்ற கைதிகள் மூலம் சசிகலாவுக்கு ஆபத்து என்பதெல்லாம் தேவையற்ற அச்சம். குற்றவழக்கில் தண்டனை பெற்றதாலே சசிகலா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவர் நாட்டுக்காக போராடி சிறைக்கு வரவில்லை. எல்லோருக்கும் வழங்கப்படுவதை போலவே பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

    கைதி விரும்பினால் ஒரு சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படும். அதற்கு கோர்ட்டும் சம்பந்தப்பட்ட இரு மாநில அரசுகளும் சம்மதம் தெரிவிக்க வேண்டும். சசிகலா தேவைப்பட்டால் தன்னை எந்த சிறைக்கு வேண்டுமானாலும் மாற்ற கோரலாம். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை.

    ஜெயிலில் சசிகலா எந்த வேலையும் செய்யவில்லை. தேவைப்பட்டால் விரும்பும் வேலையை செய்யலாம். அதற்காக பயிற்சி அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×