search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டுக்கு பணம் தந்தால் தேர்தல் கமிஷனே தேர்தலை ரத்து செய்ய அதிகாரம் வேண்டும்: நசீம் ஜைதி பேச்சு
    X

    ஓட்டுக்கு பணம் தந்தால் தேர்தல் கமிஷனே தேர்தலை ரத்து செய்ய அதிகாரம் வேண்டும்: நசீம் ஜைதி பேச்சு

    ஓட்டுக்கு பணம் தந்தால், தேர்தல் கமிஷனே தேர்தலை ரத்து செய்ய அதிகாரம் வேண்டும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி கூறினார்.
    புதுடெல்லி:

    ஓட்டுக்கு பணம் தந்தால், தேர்தல் கமிஷனே தேர்தலை ரத்து செய்ய அதிகாரம் வேண்டும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி கூறினார்.

    டெல்லியில் தேர்தல்கள் குறித்த தேசிய மாநாட்டை தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி நேற்று தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் கமிஷனின் சட்ட ஆராய்ச்சியாளர்கள், சட்ட நிபுணர்களுடனும், நிறுவனங்களுடனும் ஒன்றிணைந்து தேர்தல்கள் தொடர்பான மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை விரிவாக பரிசீலனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தேர்தல் சீர்திருத்தங்கள் என்பது முறைப்படுத்தப்பட்ட விதத்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய நடைமுறை ஆகும்.

    பல்வேறு தருணங்களில் சட்டம் இயற்றுவதற்காக தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக அனுப்பிவைக்கப்பட்ட 47 பரிந்துரைகளை தொகுத்து வழங்கி வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    இவை, சட்ட கமிஷனால் ஆராயப்பட்டுள்ளன. தேர்தல் கமிஷனின் பல்வேறு பரிந்துரைகளை சட்டங்களாக இயற்ற சட்ட கமிஷனும் பரிந்துரை செய்துள்ளது.

    இவையெல்லாம் சட்ட அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ள ஒரு பணிக்குழுவின் பரிசீலனையில் இருப்பதாக நான் அறிகிறேன். அவற்றின் மீதான முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    நாங்கள் செய்துள்ள பரிந்துரைகளில் முக்கியமானவை அரசியலில் இருந்து கிரிமினல்களை ஒழிப்பது, பணத்தை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது, அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதில் வெளிப்படையான தன்மையை கொண்டு வருவது, லஞ்சம் அளிப்பதை குற்றமாக கருதுவது, ஓட்டுக்கு லஞ்சம் தருகிறபோது தேர்தலை தேர்தல் கமிஷனே ரத்து செய்ய அதிகாரம் தருவது, வாக்குச்சாவடிகளை கைப்பற்றுகிறபோது தேர்தலை ரத்து செய்வது போல தேர்தலில் பணத்தை தவறாக பயன்படுத்துகிறபோது தேர்தலை ரத்து செய்வது உள்ளிட்டவை அடங்கும்.

    பல்வேறு தருணங்களில் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள பிரச்சினைகள், சவால்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை விரிவாக ஆய்வு செய்ய வேண்டியது முக்கியம்.

    எனவே தேர்தல் கமிஷன் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட வரைவு மசோதாவை உருவாக்க வேண்டும். அது உரிய அதிகாரம் படைத்தவர்களால் தொடர்ந்து பரிசீலிக்கப்பட வேண்டும்.

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், விரிவாக ஆராயப்பட வேண்டும். இது காலம் கடந்த ஒன்றாகும்.

    இந்த சட்டம் உரிய நேரத்தில் திருத்தி அமைக்கப்பட்டு, தேர்தலில் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டால் அல்லது ஓட்டுக்கு லஞ்சம் அளித்தால் தேர்தல் கமிஷனே தேர்தலை ரத்து செய்ய முடியும் என்று வந்திருந்தால், அது சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். (தமிழ்நாட்டில் தேர்தல்கள், கோர்ட்டு நடவடிக்கையால் ரத்து செய்யப்பட்டதை நினைவுகூரும் விதத்தில் இதைத் தெரிவித்தார்.)

    சில தேர்தல்களைப் பொறுத்தமட்டில், சில சந்தர்ப்பங்களில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைப்பதற்கு சட்ட திருத்தம் தேவைப்படுவதும், அவை எப்படி கோர்ட்டுக்கு வழக்குகளாக செல்கின்றன என்பதற்கும் இது ஒரு அற்புதமான உதாரணம்.

    இந்த சம்பவத்தில் சென்னை ஐகோர்ட்டில் பல ‘ரிட்’ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

    மின்னணு வாக்கு எந்திரங்களை பயன்படுத்த தொடங்கிய பிறகு, தேர்தல் பிரச்சினைகள் குறைந்துள்ளன. வேட்புமனு செயல்முறை, பிரசாரம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ஊழல் நடவடிக்கைகள் ஆகிய பிரச்சினைகளை சட்டத்துறையினர் பரிசீலித்து, அவற்றை குறைக்க வழிமுறைகளை காண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×