search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்கப்படும்: கர்நாடக மந்திரி பேட்டி
    X

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்கப்படும்: கர்நாடக மந்திரி பேட்டி

    தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடும்படி பிறப்பித்துள்ள சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை பின்பற்றுவோம் என்று கர்நாடக மந்திரி ஜெயச்சந்திரா கூறினார்.







    பெங்களூரு:

    சுப்ரீம் கோர்ட்டு, ஒரு நிபுணர் குழுவை அமைத்து, கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் உள்ள காவிரி படுகையில் அணைகளில் நீர்மட்டம், நீர்வரத்து, நீர் தேவை குறித்து ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி நிபுணர் குழு 2 மாநிலங்களுக்கும் வருகை தந்து காவிரி படுகையில் உண்மை நிலையை ஆய்வு செய்து சென்று, அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

    இந்த நிலையில் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் மற்றும் தமிழகம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் விசாரணை நடைபெற்றது. அப்போது, காவிரியில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் மறுஉத்தரவு வரும் வரை தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதே போல் சுப்ரீம் கோர்ட்டு நேற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் மீது நடைபெற்ற விசாரணையின்போது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து கர்நாடக மாநில சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா பெங்களூருவில் நேற்று கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறுகையில், “காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு தண்ணீரை திறக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை பின்பற்றுவோம். இதற்கு மேல் என்னால் வேறு எதுவும் சொல்ல முடியாது” என்றார்.

    Next Story
    ×