search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் நாளை தமிழ்நாடு- கர்நாடகா அதிகாரிகள் கூட்டம்: ஜெயலலிதா உரை வாசிக்கப்படுகிறது
    X

    டெல்லியில் நாளை தமிழ்நாடு- கர்நாடகா அதிகாரிகள் கூட்டம்: ஜெயலலிதா உரை வாசிக்கப்படுகிறது

    டெல்லியில் நாளை காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு-கர்நாடகா அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதில் ஜெயலலிதா உரையை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாசிப்பார் என்று தெரிகிறது.
    புதுடெல்லி:

    காவிரி நீர் பிரச்சினையில் கூட்டாட்சி தத்துவத்தை மதித்து மத்திய அரசு ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் இருமாநில அரசு அதிகாரிகளும் பங்கேற்று சுமூகத்தீர்வு காண வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

    இதைத் தொடர்ந்து மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் தமிழக- கர்நாடக அரசு அதிகாரிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. டெல்லியில் நாளை (வியாழக்கிழமை) காலை 11.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் இரு மாநில அரசு அதிகாரிகளும் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளுக்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

    மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலாளர் ராமமோகன்ராவ், பொதுப் பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா உரையை அவர் சார்பில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாசிக்கிறார்.

    கர்நாடகம் சார்பில் முதல்- மந்திரி சித்தராமையா மற்றும் தலைமைச் செயலாளர், மாநில நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    முன்னதாக காவிரி விவகாரம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மற்றும் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் உள்ள தனது அறையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தேவையான உத்தரவுகள் பிறப்பித்தார்.

    இதில் தலைமை செயலாளர் ராமமோகனராவ், அட்வகேட் ஜெனரல் ஆர். முத்துக்குமாரசாமி, அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முதல்-அமைச்சரின் முதன்மை செயலாளர் வெங்கடராமன், செயலாளர் ஏ.ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நாளை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிகாரிகள் இன்று மாலை 6 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்கள்.

    டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு 30-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்படும்.
    Next Story
    ×