search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் அடுத்த மாத இறுதியில் விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ விஞ்ஞானிகள்
    X

    பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் அடுத்த மாத இறுதியில் விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ விஞ்ஞானிகள்

    ‘கார்ட்டோ சாட்’ உள்பட 31 செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் மூலம் அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதியில் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.
    சென்னை:

    ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் செயற்கைகோளின் மேல் அமைக்கப்பட்டிருந்த வெப்பத்தகடு சரியாக செயல்படாததால் செயற்கைகோள் தோல்வியை தழுவியது.

    இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதியில் விண்ணில் செயற்கைகோளை செலுத்தும் பணியில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    தோல்விக்கு பின்னர் செலுத்தப்படும் இந்த செயற்கைகோள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் என்பதால், இந்த ஏவுதல் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தோல்விக்கு பிறகு தற்போது விண்ணில் செலுத்தும் செயற்கைகோளுக்கான பணிகள் சரியாக எடுக்கப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் கூறினார்கள்.

    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

    கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் தோல்வியடைந்தது. இதனால் இஸ்ரோ வரும் காலங்களில் ஏவப்படும் ராக்கெட்டுகளை மிகவும் எச்சரிக்கையுடன் கையாண்டு வருகிறோம். வரும் டிசம்பர் இறுதியில் தொலைதூர உணர்திறன் செயற்கைகோள் ‘கார்ட்டோ சாட்’ உள்பட 31 செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவது தான் அடுத்த இலக்காக உள்ளது. அதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம்.

    தொடர்ந்து 2018-ம் ஆண்டு முதல் காலாண்டில் சந்திரயான்-2 உள்பட 3 ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்துவதற்கான பணிகளும் 2-வது ஏவுதளத்தில் நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து செயற்கைகோள்களை விண்ணுக்கு எடுத்து செல்ல தொடர்ந்து பயன்படுத்தும் வகையிலான ‘மறுபயன்பாட்டு வெளியீட்டு வாகனம்’ 2-வது தொழில் நுட்பத்தில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    இம்மாத இறுதியில் பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் விண்ணில் செலுத்த திட்டமிட்டது. என்றபோதிலும், தொடர்ச்சியான சோதனைகள் நடத்த வேண்டியிருப்பதால் டிசம்பர் இறுதிக்குள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. எந்த முரண்பாடுகளையும் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    தோல்வியடைந்த ராக்கெட் வடிவமைப்பில் எந்த தவறும் இல்லை. ராக்கெட்டின் மேல் முனையில் வெப்பகவசம் செயற்கை கோளை சுற்றுப்பாதையில் விடுவிப்பதில் தோல்வியடைந்தது. அது ‘பைரோநுட்பம்’ என்ற தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட தவறாக இருக்கலாம்.

    வழக்கமாக வெப்ப கவசம் 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, கூம்பு முனையில் இருந்து செயற்கை கோள் சுற்றுப்பாதைக்கு வெளியேறுவதற்கு திறக்கிறது. ஆனால் இந்த ராக்கெட்டில் 20 நிமிடங்கள் கழித்து திறக்க முடியவில்லை. சுற்றுச்சூழலுக்கு எதிரான உராய்வு காரணமாக உந்தப்பட்ட வெப்பத்தை உறிஞ்சுவதற்கும், ராக்கெட்டின் கூறுகள் மற்றும் எரிபொருள் தொட்டிகளைப் பாதுகாப்பதற்கும் வெப்ப கவசம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த ராக்கெட் தோல்வியடைந்தது குறித்து பகுப்பாய்வுக்கு குழு மற்றும் விரைவில் அறிக்கை வெளியிடப்பட உள்ளது.

    இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.
    Next Story
    ×