search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார்: டிடிவி. தினகரனிடம் இன்று 3-வது நாளாக விசாரணை
    X

    ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார்: டிடிவி. தினகரனிடம் இன்று 3-வது நாளாக விசாரணை

    இரட்டை இலை சின்னத்தை பெற சுகேஷ் சந்திரசேகரிடம் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பாக டிடிவி.தினகரனிடம் டெல்லி போலீசார் இன்று 3-வது நாளாக விசாரணை நடத்த உள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால், அந்த கட்சியின் சின்னமான “இரட்டை இலை” சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கி வைத்துள்ளது.

    இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுக்கலாம் என்று தேர்தல் கமி‌ஷன் ஆய்வு செய்து வருகிறது. இதற்காக இரு அணியினரும் ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் பெற அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் அவர் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்காக சுகேசுக்கு ரூ.10 கோடியை தினகரன் கொடுத்ததாக தகவல் வெளியானது.

    டெல்லியில் கைதான சுகேசிடம் இருந்து ரூ.1.3 கோடி கைப்பற்றப்பட்டது. மீதம் ரூ.8.7 கோடியை போலீசார் தேடி வருகிறார்கள். இது தொடர்பாக சுகேசிடம் அவர்கள் நடத்தி வரும் விசாரணை நாளை முடிய உள்ளது.


    இந்த நிலையில் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பாக டி.டி.வி.தினகரன் மீது 3 பிரிவுகளில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்த விசாரணைக்கு வருமாறு டெல்லி போலீசார் சென்னை வந்து சம்மன் கொடுத்தனர்.

    அதை ஏற்று டி.டி.வி. தினகரன் கடந்த சனிக்கிழமை டெல்லி சென்றார். சாணக்கியாபுரியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் போலீஸ் முன்பு அவர் ஆஜரானார்.

    முதல் நாள் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இரண்டாவது நாளான நேற்று சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று இரவு விசாரணை நீண்ட நேரம் நீடித்தது.

    இந்த 17 மணி நேர விசாரணையில் டெல்லி குற்றப்பிரிவு போலீசாருக்கு திருப்தி ஏற்படவில்லை. நிறைய கேள்விகளுக்கு டி.டி.வி.தினகரனிடம் இருந்து அவர்களால் உரிய பதில் பெற இயலவில்லை.

    இந்த விசாரணைகளின் போது தினகரனின் வாட்ஸ்-அப் மற்றும் எஸ்.எம்.எஸ். தகவல் பரிமாற்றங்களையும் டெல்லி போலீசார் காண்பித்து கேள்விகள் கேட்டனர். இன்னும் அந்த விசாரணை முடியவில்லை.

    இதையடுத்து இன்று (திங்கட்கிழமை) மூன்றாவது நாளாக டெல்லி போலீசார் டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் சாணக்கியாபுரி அலுவலகத்துக்கு வருமாறு தினகரனுக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

    சுகேசிடம் இதுவரை நடந்த விசாரணைகளின் அடிப்படையில் டெல்லி போலீசார் நிறைய கேள்விகளை தயாரித்துள்ளனர். ஹவாலா மூலம் கொச்சியில் இருந்து டெல்லிக்கு பணப்பரிமாற்றம் நடந்தது பற்றியும் கேள்விகள் தயாரித்துள்ளனர்.

    இந்த கேள்விகளை டெல்லி போலீசார் இன்று தினகரனிடம் கேட்க திட்டமிட்டுள்ளனர். எனவே டி.டி.வி.தினகரனிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணை மேலும் நீடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
    Next Story
    ×