search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் சூறைகாற்றுடன் மழை: மரம் விழுந்து கார் நொறுங்கியது
    X

    வேலூரில் சூறைகாற்றுடன் மழை: மரம் விழுந்து கார் நொறுங்கியது

    104 டிகிரி வெயிலுக்கிடையில் வேலூரில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு மேல் இடியுடன் கூடிய மழை பெய்ததால் சாலையோரம் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் வெயில் கொளுத்தியது. பிற்பகல் 2 மணிக்கு மேல் படிப்படியாக குறைந்து மாலை 4 மணிக்கு மேல் வேலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

    வேலூர் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் அளவு 100 டிகிரியை தாண்டியது. கடந்த மார்ச் 8-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை 100 டிகிரியை தொட்டு வந்த வெயில் அளவு ஏப்ரல் 7-ந்தேதி 106 டிகிரியாக பதிவானது.

    இதையடுத்து 103, 106 டிகிரியாக பதிவாகி வந்த வெயில் அளவு, ஏப்ரல் 17-ந்தேதி 110.3 டிகிரியும், 18-ந்தேதி 109.4 டிகிரியாக பதிவானது.

    அக்னி நட்சத்திர காலத்தில் கொளுத்த வேண்டிய வெயில் மார்ச், ஏப்ரல் மாதங்களிலே பதிவானதால் வெயில் தாக்கத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. நண்பகல் 12 மணி அளவில் அனல் காற்று வீசியது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. நேற்று வேலூரில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது.

    இந்த நிலையில் திடீரென பிற்பகல் 2 மணிக்கு மேல் வானில் மேக மூட்டம் சூழ்ந்ததால் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது. மாலை 4 மணி அளவில் வேலூர், காட்பாடி மற்றும் சத்துவாச்சாரி பகுதிகளில் மழை பெய்தது. 15 நிமிடங்களுக்கு பெய்த லேசான மழையால் வேலூரில் குளிர்ந்த காற்று வீசியது. கடந்த ஒரு மாதமாக வெயிலின் கொடுமையை அனுபவித்து வந்த மக்களுக்கு இது மகிழ்ச்சியை அளித்தது.

    அதேபோல் குடியாத்தம், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது.

    வாணியம்பாடியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின் கம்பங்களும், மரங்களும் சாந்தன. வாணியம்பாடி அடுத்த மாதக்கடப்பா மலை பகுதியை சேர்ந்த உமாபதி என்பவரின் வீட்டின் மீது இடி தாக்கியது. இதில் அவரது வீட்டின் முன்பக்கம் சிலாப் இடிந்து விழுந்தது. இதில் உமாபதியும், அவரது மகன் விஜய்யும் படுகாயமடைந்தனர். உடனே அவர்கள் மீட்கப்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    அதேபோல் நாட்டறம்பள்ளியில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் சாலையோரம் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளியை சேர்ந்த தாமரைச்செல்வன் என்பவர் தனது காருக்கு எரிபொருள் நிரப்ப, நாட்டறம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள பெட்ரோல் பங்க்குக்கு நேற்று மாலை வந்தார்.

    பெட்ரோலை நிரப்பி விட்டு மரத்தின் நிழலில் காரை நிறுத்திவிட்டு பக்கத்தில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது பலத்த காற்று வீசியதால் அங்குள்ள புளியமரம் வேரோடு சாய்ந்து நின்றிருந்த கார் மீது விழுந்தது. இதில் கார் சேதமடைந்தது.

    மொத்தத்தில் பருவ நிலை மாற்றத்தால் வேலூரில் அனல் காற்று குறைந்தது. குளிர் காற்று வீசியது. இந்த பருவநிலை மாற்றத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×