search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் ராணுவவீரர் மனைவியை கடத்தி ரூ.1 லட்சம் பறிப்பு
    X

    வேலூர் ராணுவவீரர் மனைவியை கடத்தி ரூ.1 லட்சம் பறிப்பு

    வேலூரில் ராணுவவீரர் மனைவியை கடத்தி ரூ.1 லட்சம் பறித்த 7 பேர் கொண்ட கும்பலை அவரது உறவினர்கள் சரமாரியாக அடித்து, உதைத்தனர்.
    அணைக்கட்டு:

    வேலூர் சத்துவாச்சாரி அலமேலுமங்காபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ் பாபு (வயது 32). ராணுவ வீரர். இவருடைய மனைவி மோகன தேவி (23). இவர்களது 3 வயது மகள் வர்ஷினி.

    ராஜேஷ் பாபு ராணுவத்தில் பணிபுரிவதால், மனைவி மோகனதேவி ஒடுகத்தூர் அடுத்த நேமந்தபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குழந்தையுடன் அடிக்கடி செல்வார். அங்கு ஓரிரு நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் தனது கணவர் வீட்டுக்கு திரும்பி விடுவார்.

    கடந்த ஜனவரி 31-ந் தேதி தாய் வீட்டுக்கு சென்ற மோகன பிரியா குழந்தையுடன் மாயமானார். இதுகுறித்து 26 நாட்களுக்கு பிறகு, வேப்பங்குப்பம் போலீசில் கடந்த மாதம் 27-ந் தேதி புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில், மாயமான மோகனதேவி குழந்தையுடன் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்தார். அவரிடம் விசாரித்ததில், செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த ஜானி என்ற வாலிபர் ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றது தெரியவந்தது.

    கடத்தப்பட்ட மோகன தேவியை குழந்தையுடன் செங்கல்பட்டில் உள்ள தனது இடத்தில் சிறை வைத்தார். வங்கி கணக்கில் இருந்த ரூ.1 லட்சம் பணத்தை மிரட்டி பறித்துள்ளார். ஜானியிடம் இருந்து தப்பி வந்ததாக மோகனதேவி கூறினார்.

    தன்னை கடத்திய ஜானி, சோப்பு வியாபாரி என்றும் செங்கல்பட்டில் பதுங்கி இருப்பதாகவும் அவர் புகார் கூறினார். இதையடுத்து, நேமந்தபுரத்தில் வசிக்கும் பெற்றோரை வரவழைத்த போலீசார் மோகனதேவியை குழந்தையுடன் அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில், ஜானி தனது கூட்டாளிகள் 6 பேருடன் நேற்றிரவு மோகன தேவியை தேடி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த மோகன தேவியை மிரட்டி விட்டு சென்றனர். இதனால் மோகன தேவி உறவினர்கள் ஆத்திரமடைந்தனர்.

    ஊனை பள்ளத்தூர் என்ற இடத்தில் சென்றுக் கொண்டிருந்த ஜானி மற்றும் அவரது கூட்டாளிகளை மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து, உதைத்தனர். இது தொடர்பாக, வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×