search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹைட்ரோகார்பன் எரிவாயு திட்டம்: தமிழக பா.ஜனதா தலைவர்கள் இரட்டை வேடம் போடுகிறார்கள்- திருநாவுக்கரசர்
    X

    ஹைட்ரோகார்பன் எரிவாயு திட்டம்: தமிழக பா.ஜனதா தலைவர்கள் இரட்டை வேடம் போடுகிறார்கள்- திருநாவுக்கரசர்

    ஹைட்ரோ கார்பன் எரிவாயு தமிழக பா.ஜனதா தலைவர்கள் இரட்டை வேடம் போடுகிறார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சமீப காலமாக தமிழக நலன்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. அரசு எடுத்து வருகிறது. மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைமை, மாநில அரசில் பொறுப்பு வகிக்காத காரணத்தால் மக்கள் விரோத திட்டங்களை மத்திய அரசு மிகத் தந்திரமாக திணித்து வருகிறது.

    தமிழகத்திலுள்ள 8 லட்சம் பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிட மாணவர்களின் எதிர் காலத்தை கேள்விக் குறியாக்கும் தேசிய நுழைவுத் தேர்வை திணிப்பதில் மத்திய அரசு வெற்றி பெற்றிருக்கிறது. இதை தடுத்து நிறுத்துவதற்காக தமிழக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக  வைக்கப்பட்டிருக்கிறது.

    அப்படி ஒப்புதல் கிடைக்க வில்லையெனில் தமிழகத்தின் எதிர்காலமே கேள்விக் குறியாக மாறிவிடும் என எச்சரிக்கிறேன். இதற்கு மத்திய மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்.


    ஏற்கனவே மீத்தேன் எரிவாயு திட்டத்தை காவிரி டெல்டா விவசாயிகள் கடுமையாக எதிர்த்த காரணத்தால் மத்திய பா.ஜ.க. அரசு திட்டத்தை ரத்து செய்தது. தற்போது நாடு முழுவதும் ஒ.என்.ஜி.சி நிறுவனத்தால் எரிவாயு கண்டறியும் முயற்சியில் 25 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் நெடுவாசல், குத்தாலம், கீழ்வேளுர், நன்னிலம் ஆகிய நான்கு இடங்கள் இடம் பெற்றுள்ளன.

    இதற்கான ஹைட்ரோ கார்பன் எரிவாயு கண்டறியும் கொள்கை கடந்த 2015-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் மத்திய அரசும், தனியார் துறையும் இணைந்து வருவாய் பகிர்வு திட்டத்தின் மூலமாக செயல் படுத்துவதென முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கு மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

    மத்திய பா.ஜ.க. அரசு இத்திட்டத்தை செயல்படுத்துவதில் மிகத் தீவிரமாக இறங்கி உள்ளது.

    ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டம் குறித்து தமிழக மக்களிடையே தவறான பிரச்சாரம் செய்யப்படுவதாக மத்திய பா.ஜ.க. அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது.


    ஏற்கனவே முனையம் துறைமுக திட்டத்தில் அந்தப் பகுதி மீனவ மக்களின் எதிர்ப்புக் குரலை புறக்கணித்து செயல் பட்டு வருகிற பொன். ராதாகிருஷ்ணன், நெடுவாசல் போராட்டத்திற்கும் எதிராக பேசுவது வியப்புக் குரியது அல்ல.

    இந்நிலையில் தமிழக பா.ஜ.க.வினர் இரட்டை வேடம் போடுவதை உடனே கைவிட வேண்டும். ஒன்று, தமிழக மக்களுக்காக பேச வேண்டும். மத்திய அரசும், தனியார் துறையும் இணைந்து வருமான பகிர்வின் அடிப்படையில் செயல்படுத்தும் திட்டத்திற்கு ஆதரவாக பேச வேண்டும்.இந்த இரண்டையும் பேச இயலாத நிலையில் உள்ள தமிழக பா.ஜ.க. மக்களால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.

    தமிழக நலனுக்கு எதிராக தேசிய நுழைவுத் தேர்வு, மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டம் போன்ற பல திட்டங்களை திணிப்பதற்கான தீவிர முயற்சியில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. இதை தடுத்து நிறுத்துகிற வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும்.

    இயற்கை வளங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய பா.ஜ.க. அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்கும், துணை நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×