search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எண்ணூர் சிறுமி கொலையில் கள்ளக்காதலனுடன் பெண் கைது
    X

    எண்ணூர் சிறுமி கொலையில் கள்ளக்காதலனுடன் பெண் கைது

    பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நகைக்காக 3 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் எண்ணூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவொற்றியூர்:

    எண்ணூர், சுனாமி குடியிருப்பு 26-வது பிளாக்கில் வசித்து வருபவர் பழனி. இவரது 3 வயது மகள் ரித்திகா.

    நேற்று முன்தினம் வீட்டு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ரித்திகா திடீரென மாயமானாள். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை திருவொற்றியூர், மணலி சாலையில் குப்பை கிடங்கில் சிறுமி ரித்திகா கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தாள்.

    அவளது வாயில் துணி திணிக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் எண்ணூர் போலீசார் விரைந்து சென்று ரித்திகாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் பூந்தமல்லியை அடுத்த மதானந்தபுரத்தில் 7 வயது சிறுமி ஹாசினி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது போன்றே ரித்திகாவும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது.

    அதே நேரத்தில் சிறுமி ரித்திகா அணிந்திருந்த நகைகள் காணாமல் போயிருந்தது. இதனால் நகைக்காக ரித்திகா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

    ரித்திகாவின் கொலை சம்பவத்தால் எண்ணூர் சுனாமி குடியிருப்பில் நிலவிய பதட்டத்தை தணிப்பதற்காக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி நேரில் சென்றார். ரித்திகாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி அஞ்சலி செலுத்திய அவர் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    போலீஸ் விசாரணையில் ரித்திகா எதிர்வீட்டில் உள்ள ரேவதி என்ற பெண்ணின் வீட்டில் விளையாடியது தெரியவந்தது. எனவே ரேவதி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது ரேவதி தனது கள்ளக்காதலன் ராஜேசுடன் சேர்ந்து சிறுமி ரித்திகாவை கொலைசெய்தது தெரியவந்தது.

    ரேவதி கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். அவருக்கு 3 வயதில் கமலி என்கிற பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் ரேவதிக்கு அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் அடிக்கடி ரேவதியின் வீட்டுக்கு வந்து செல்வார்.

    மறியிலில் ஈடுபட்ட பெண்களை படத்தில் காணலாம்

    சிறுமி ரித்திகாவும் ரேவதியின் குழந்தை கமலியுடன் விளையாடுவதற்காக ரேவதியின் வீட்டுக்கு அடிக்கடி செல்வாள்.

    நேற்று முன்தினம் மாலையிலும் ரித்திகா ரேவதியின் வீட்டுக்கு சென்றாள். அப்போது ரித்திகா அணிந்திருந்த நகைகள் மீது ரேவதி கண்வைத்தார். அந்த நகைகளை தனது வீட்டில் வைத்தே அவர் கழற்றி எடுத்தார். இந்த நேரத்தில் ரேவதியின் கள்ளக்காதலன் ராஜேசும் வீட்டில் இருந்தார். அவர் மது அருந்தி இருந்தார்.

    போதை தலைக்கேறிய நிலையில் காணப்பட்ட ராஜேஷ் சிறுமி ரித்திகாவிடம் தகாதமுறையில் நடந்தார்.

    அப்போது தான் சிறுமி ரித்திகா பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவளது உடலை வீட்டிலேயே ராஜேசும் ரேவதியும் மறைத்து வைத்து விட்டு அன்று இரவு குப்பை மேட்டில் வீசி உள்ளனர்.

    போலீஸ் விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்தது. இதனையடுத்து ராஜேசையும் ரேவதியையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ரித்திகா அணிந்து இருந்த நகைகளை எண்ணூர் ராம கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு அடகு கடையில் இருவரும் ரூ. 2200-க்கு அடகு வைத்தது தெரியவந்தது. அந்த நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ரேவதியும் ,ராஜேசும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

    இதற்கிடையே ரித்திகாவை கொலைசெய்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது பொதுமக்கள் இந்த பகுதியில் இது போன்று சமூக விரோத செயல்கள் அடிக்கடி நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டினர். போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    சிறுமி ரித்திகா உடலுக்கு தமிழிசை சவுந்தராஜன் அஞ்சலி செலுத்தினார்.

    பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நகைக்காக 3 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் எண்ணூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக ராஜேஷ் , ரேவதி இருவர் மீதும் கடுமையான சட்டபிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    பூந்தமல்லியை அடுத்த மகாநந்தபுரத்தில் 7 வயது சிறுமி ஹாசினி செக்ஸ் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பரபரப்பு அடங்கும் முன்னரே சிறுமி ரித்திகா கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    Next Story
    ×