search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லிக்குப்பம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் புதிய மண் பானைகள்
    X

    நெல்லிக்குப்பம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் புதிய மண் பானைகள்

    நெல்லிக்குப்பம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்காக பல்வேறு அளவுகளில் மண் பானைகள், சட்டி, அடுப்புகளை தொழிலாளர்கள் தயாரித்து வருகிறார்கள்.
    நெல்லிக்குப்பம்:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புது மண் பானைகளை மண்பாண்ட தொழிலாளர்கள் செய்ய தொடங்கி விட்டனர்.

    கடலூர் மாவட்டம் சாவடி, சி.என்.பாளையம், திருத்துறையூர், விருத்தாசலம் உள்பட பல்வேறு கிராமங்களில் புதிய மண் பானைகள் தயார் செய்யப்படுகிறது.

    கடலூர் நெல்லிக்குப்பத்தை அடுத்த திருத்துறையூர் கிராமத்தில் பொங்கல் பண்டிகைக்காக ½ கிலோ அரிசி முதல் 7 சின்னபடி அரிசியிட்டு பொங்கல் வைப்பதற்கு ஏற்ற வகையில் பல்வேறு அளவுகளில் மண் பானைகள், சட்டி, அடுப்புகள் தயாரித்து வருகிறார்கள்.

    கிராமங்களில் இன்னும் மண்பானைக்கு மவுசு தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. மண்பாண்ட தொழில் செய்யும் திருத்துறையூர் காசிநாதன்(வயது 58) கூறியதாவது:-

    மண்பானைகள் செய்வதற்கு பனப்பாக்கம் ஏரியில் இருந்து மண் எடுத்து வருகிறோம். ஆனால் முறையாக எங்களுக்கு மண் எடுப்பதற்கு தாசில்தார் பர்மிட் வழங்கி எங்கள் தொழிலுக்கு வாழ்வளிக்க வேண்டும்.

    எந்தவித கடனும் வங்கிகள் வழங்குவதில்லை. எங்களுக்கு அரசு கூட்டுறவு கடன் சங்கம் லோன் வழங்க வேண்டும். அழிந்து வரும் மண்பாண்ட தொழிலை அபிவிருத்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த பொங்கல் பண்டிகையின்போது முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா ரூ.4 ஆயிரம் பணம் வழங்கினார். இந்த ஆண்டு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை வழங்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதியதாக செய்யப்படும் மண்பானைகள் பண்ருட்டி, நெய்வேலி, விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கோவை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    மண்பானைகள் ரூ.25 முதல் ரூ.100 வரை மொத்த வியாரிகளுக்கு விற்பனை செய்கிறார்கள். வியாபாரிகள் ரூ.40 முதல் ரூ.150 வரை விற்பனை செய்கிறார்கள்.
    Next Story
    ×