search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா விரைவில் நலம்பெற வேண்டும்: ராமதாஸ் அறிக்கை
    X

    ஜெயலலிதா விரைவில் நலம்பெற வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

    அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வந்தார்.

    லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேல், எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் அளித்த மருத்துவத்தால் ஜெயலலிதா உடல் நலம் தேறியதைத் தொடர்ந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது.

    அதன்பின் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவும், அவர் விரும்பும் நேரத்தில் வீடு திரும்பலாம் என்றும் மருத்துவமனையின் நிறுவனர் அறிவித்திருந்தார்.

    இத்தகைய சூழலில் அவருக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன. லண்டன் மருத்துவர் பேலின் வழிகாட்டுதலில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்த சிகிச்சையின் உதவியால் ஜெயலலிதா விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து ஆதாரமற்ற செய்திகளை பரப்புதல், வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட செய்திகளை அனைத்துத் தரப்பினரும் தவிர்க்க வேண்டும். அதன்மூலம் தமிழகத்தில் பதற்றம் ஏற்படாமல் தவிர்க்க உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல்நலம் பெற்று வருகிறார் என்று செய்திகள் வந்த நிலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்ற செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரைவில் பரிபூரண உடல் நலம் பெற்று தனது முதலமைச்சர் பொறுப்புகளை மீண்டும் ஆற்றுவதற்கு இறைவன் கிருபை செய்ய பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×