search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நவ.1-ந் தேதி முதல் புதிய ரே‌ஷன் கார்டுகளுக்கு ‘ஆன்-லைனில்’ விண்ணப்பிக்கலாம்
    X

    நவ.1-ந் தேதி முதல் புதிய ரே‌ஷன் கார்டுகளுக்கு ‘ஆன்-லைனில்’ விண்ணப்பிக்கலாம்

    புதிய ரே‌ஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நவ.1-ந்தேதி முதல் ஆன் லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். ஆவணங்களை ஸ்கேன் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
    சென்னை:

    தமிழகத்தில் சுமார் 2 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன.

    கடந்த சில வருடங்களாக புதிய ரே‌ஷன் கார்டுகள் வழங்க இயலாத நிலையில் உள்தாள் ஒட்டப்பட்டு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

    கால நீட்டிப்பு செய்யப்பட்ட ரே‌ஷன் கார்டுகள் டிசம்பர் மாதம் வரை மட்டுமே பொருட்கள் வாங்க முடியும்.

    அதனால் புதிய ரே‌ஷன் கார்டு கையடக்க அளவில் (ஸ்மார்ட்) வழங்க அரசு திட்டமிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜனவரி மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் பொருட்கள் வாங்க அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் நவீன எலக்ட்ரானிக் கருவி அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த கருவியில் அனைத்து குடும்ப அட்டைகளின் முழு விவரமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆதார் எண்களை இணைக்கும் வகையில் ஆதார் அட்டை ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த பணி மற்ற மாவட்டங்களில் 85 சதவீதம் முடிவடைந்த போதிலும் சென்னையில் 55 சதவீதம் தான் நடந்துள்ளது.

    சென்னையில் உள்ள 2 ஆயிரம் கடைகளிலும் கடந்த மாதம் தொடங்கப்பட்ட இந்த பணி இன்னும் முழுமை அடையவில்லை. இதனால் நவம்பர் 15-ந்தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக ஆதார் அட்டையை கருவியில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தமிழகம் முழுவதும் உள்ள 33,500 ரே‌ஷன் கடைகளில் வருகிற 1-ந்தேதி முதல் நவீன எலக்ட் ரானிக் கருவி மூலம் பொருட்கள் வழங்க வேண்டும் என்று ரே‌ஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ‘ஸ்மார்ட்’ கார்டு இல்லாமல் எந்திரம் மூலம் பொருட்கள் வழங்கும் பணியை தொடங்கினால் இதுவரையில் பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் விவரங்களை பதிவு செய்ய வசதியாக இருக்கும் என்றும் பிழைகள் எதுவும் இருந்தால் அதனை திருத்தம் செய்து கொள்ளவும் முடியும் என்றும் கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    எனவே 1-ந்தேதி முதல் நவீன கருவிகள் வழியாக பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்படும்.

    இதுபற்றிய தகவல் குடும்ப அட்டைதாரர்களின் செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

    செல்போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ். தகவலை ஊழியரிடம் காட்டி பொருட்களை வாங்கி செல்ல வேண்டும்.

    செல்போன் எடுத்து செல்லாதவர்களுக்கு துண்டு சீட்டில் பொருட்கள் குறித்த விவரங்கள் கையால் எழுதி தரப்படும் என்று சிவில் சப்ளை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மேலும் வருகிற 1-ந்தேதி முதல் புதிய ரே‌ஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன் லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். ஆவணங்களை ஸ்கேன் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

    வீடுகளில் கள ஆய்வு செய்து புதிய குடும்ப அட்டை 2 மாதத்தில் வழங்கப்படும். குடும்ப அட்டை வழங்கும் போது ஒரிஜினல் சான்றுகள் சேகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×