search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு பஸ் மீது மணல் லாரி மோதி விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
    X

    அரசு பஸ் மீது மணல் லாரி மோதி விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

    சேலம் அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது
    மேச்சேரி:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து மேச்சேரி வழியாக தர்மபுரிக்கு 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று காலை ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது.

    இந்த பஸ் தொப்பூர் பஸ் நிலையம் செல்வதற்காக அங்குள்ள சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றது. அப்போது சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற மணல் லாரி அந்த பஸ் மீது பயங்கரமாக மோதியதில் பஸ் அப்பளம் போல நொறுங்கியது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பாக்கியம்,செல்வி,மாரி முத்து,சின்னதுரை, புலவேந்திரராஜூ, அருள்மொழி ஆகியோர் நேற்று பலியானார்கள். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அங்கு உயர் மட்ட பாலம் அமைக்க கேட்டு சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

    இதற்கிடையே அங்கு சென்ற மாவட்ட கலெக்டர் சம்பத் உயர் மட்ட பாலம் மற்றும் சர்வீஸ் ரோட்டில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த பகுதி மக்களிடம் உறுதி அளித்தார்.

    விபத்தில் காயம் அடைந்தவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரி மற்றும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இதற்கிடையே சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற தர்மபுரி பழையூர் பகுதியை சேர்ந்த ஆஷா (வயது 30) என்பவர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×