search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் உடல்நலம் பற்றி வதந்தி: தமிழச்சி மீது வழக்கு பதிவு
    X

    முதல்-அமைச்சர் உடல்நலம் பற்றி வதந்தி: தமிழச்சி மீது வழக்கு பதிவு

    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி தமிழச்சி என்ற பெயரில் முகநூலில் (பேஸ்புக்) தவறான தகவல்களைப் பரப்பிய பிரான்ஸ் நாட்டவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நிலை தேறி வருவதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் உடல்நிலை பற்றி கடந்த 3 நாட்களாக தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் தினமும் மாலையில் தொடங்கி இரவு வரை இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. நேற்று மாலையும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டது.

    இந்த தவறான தகவல்களை கேட்டு முதல்-அமைச்சர் உடல்நிலை பற்றி பொதுமக்கள் பத்திரிகை அலுவலகங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டு வருகிறார்கள்.

    நேற்று அ.தி.மு.க. மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராமச்சந்திரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

    அந்த புகார் மனுவில், பிரான்ஸ் நாட்டிலிருந்து தமிழச்சி என்பவர் தனது முகநூலில் முதல்-அமைச்சர் உடல்நிலை பற்றி தவறான தகவல்களை வெளியிட்டுள்ளார். தீயநோக்கத்துடன் முதல்-அமைச்சர் உடல்நிலைப் பற்றி அவர் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

    அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் நேற்று 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் கிளாக்சன் தலைமையில் தனிப்படை போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கிவிட்டனர்.

    தமிழச்சி என்பவர் யார்? அவர் பிரான்ஸ் நாட்டில் எங்கு வசிக்கிறார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தமிழச்சி என்பது உண்மையான பெயராக இருக்காது என்றும், அவரது உண்மையான பெயர் வேறாக இருக்கும் என்றும், தமிழச்சி என்ற புனைபெயரில் இதுபோன்ற தவறான தகவல்களை அவர் வெளியிட்டு வருகிறார் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.

    தமிழச்சி தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் தான் ஒரு பெண் என்பதுபோல ஒரு பெண்ணின் புகைப்படத்தோடு தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

    அவரைப் பற்றிய முழுவிவரம் தெரிந்த பிறகு அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

    முதல்-அமைச்சர் பற்றி தவறான தகவல்களை முகநூலில் (பேஸ்புக்) பதிவு செய்து பிறருக்கு அனுப்புவது கடுமையான குற்றமாகும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழச்சி என்ற பெயரில் சுவாதி கொலை வழக்கு பற்றியும் போலீசாருக்கு எதிரான தகவல்கள் ஏற்கனவே வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழச்சி பற்றி ஏற்கனவே டி.ஜி.பி. அலுவலகத்திலும் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அப்பல்லோஆஸ்பத்திரி நிர்வாகம் சில நாட்களுக்கு ஜெயலலிதாவுக்கு ஓய்வு தேவை என்று அறிவித்துள்ளதால் அவர் வீடு திரும்புவதற்கு மேலும் சில நாட்கள் ஆகும் என்று தெரிகிறது.

    இந்தநிலையில் பழம்பெரும் நடிகைகள் சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோர் நேற்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலில் பூஜை செய்து பிரசாதம் கொண்டு வந்தனர். அவர்களை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை.

    Next Story
    ×