search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதையல் ஆசை காட்டி நிர்வாண பூஜை: 8 பேரை கொன்று புதைத்தேன்- சைக்கோ வாலிபர் வாக்குமூலம்
    X

    புதையல் ஆசை காட்டி நிர்வாண பூஜை: 8 பேரை கொன்று புதைத்தேன்- சைக்கோ வாலிபர் வாக்குமூலம்

    8 பேரை சைக்கோ வாலிபர் கொன்று புதைத்த சம்பவம் திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரைச் சேர்ந்த தங்கதுரை (வயது 35) கடந்த 7-ந்தேதி திடீரென மாயமானார்.

    9-ந்தேதி திருவெறும்பூர் அருகே கிருஷ்ணசமுத்திரம் பத்தாளப்பேட்டை என்ற இடத்தில் வாய்க்கால் ஒரத்தில் தங்கதுரை நிர்வாண நிலையில் கொன்று புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    தங்கதுரையை கொலை செய்து புதைத்தது யார் என திருவெறும்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தங்கதுரையின் செல்போனை பயன்படுத்தி இருந்த அவரது நண்பர் கிருஷ்ண சமுத்திரத்தை சேர்ந்த சப்பாணி (35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    சப்பாணி தனது நண்பரான தங்கதுரையை அவரது நகைக்காக ஆசைப்பட்டு கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டார். மேலும் தங்கதுரையை போன்று 8 பேரை கொன்று புதைத்ததாகவும் அதிர்ச்சி தகவலையும் தெரிவித்தார்.

    இதனால் அந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அவர் கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2016 வரை 8 பேரை கொலை செய்து புதைத்தாக தெரிவித்தார்.

    திருவெறும்பூர் போலீசாரிடம் சப்பாணி அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது:-

    எனது தந்தை தேக்கன், தாய் கருப்பாயி. எனக்கு திருமணமாகி மோகனப்பிரியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். வயலில் கூலி வேலைக்கு சென்று வந்த நான் பணம் இல்லாமல் சிரமப்பட்டேன்.

    இந்த நிலையில் எங்கள் பகுதியில் குடும்ப பிரச்சனை காரணமாக கோவிலுக்கு வரும் நபர்கள் நகையுடன் வருவதை பார்த்து அதை அபகரிக்க திட்டமிட்டேன். அவர்களிடம் நைசாக பேச்சுக் கொடுத்து தனக்கு தெரிந்த இடத்தில் புதையல் இருப்பதாகக்கூறி அதனை எடுக்க பூஜை செய்ய வேண்டும் என்று கூறினேன்.

    அதை நம்பி வருபவர்களை காட்டு பகுதிக்கு அழைத்து சென்று நிர்வாண பூஜை செய்து அவர்கள் கண்களை மூடி சாமி கும்பிடும் போது பின்னால் நின்று தலையில் தாக்கி கொலை செய்து நகை, பணத்தை அபகரித்துக் கொள்வேன். எனது செயல் பிடிக்காமல் மனைவி மோகனப்பிரியா வேறு ஒரு நபருடன் வீட்டை விட்டு ஓடி விட்டார்.

    அப்போதுதான் எனது பழைய நண்பரான தங்கதுரையும் குடும்ப பிரச்சனை இருப்பதாக கூறினார். அவரையும் பிரச்சனை தீர நிர்வாண பூஜை செய்ய வேண்டும் என்று கூறி அழைத்து சென்று அடித்துக் கொலை செய்து நகையை அபகரித்தேன். அதன் பிறகு அவரை வாய்க்காலில் புதைத்தேன்.

    இவ்வாறு சப்பாணி போலீசாரிடம் கூறியுள்ளார்.

    சப்பாணி கொன்று புதைத்ததாக கூறப்படும் நபர்கள் விபரம் வருமாறு:-

    1.கோகிலா (70), மேலகும ரேசபுரம், திருவெறும்பூர், 2.அற்புதசாமி, பாப்பாக்குறிச்சி, 3.விஜய்விக்டர், கீழக்குமரேசபுரம், 4.சத்திய நாதன், கூத்தைப்பார். 5.மட்டையன் என்ற பெரியசாமி, 6.குமரேசன் (50) உப்பிலிய புரம், 7.தேக்கன் (70) (சப்பாணியின் தந்தை) 8. தங்கதுரை.

    இதில் தனது தந்தையான தேக்கனையும் சப்பாணி கொன்று புதைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது செயலை கண்டித்ததால் சப்பாணி தந்தையை கொன்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

    சப்பாணி கொன்று புதைத்ததாக கூறப்படும் நபர்கள் 8 பேர் மட்டும் தானா? வேறு பலர் உள்ளார்களா? மேலும் சப்பாணி பூஜை செய்வதற்கு சாமியார் ஒருவரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. அவர் எங்கே? தங்கதுரை கொன்று புதைத்த மற்றும் எரித்த உடல்கள் எங்கே? என்பதை கண்டுபிடித்து போலீசார் மீட்க முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக சப்பாணியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இன்று திருச்சி கோர்ட்டில் சப்பாணியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி மனு செய்துள்ளனர்.8 பேரை சைக்கோ வாலிபர் கொன்று புதைத்த சம்பவம் திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×