search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் எந்த சிக்கலும் இருக்காது: டாக்டர்கள் தகவல்
    X

    ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் எந்த சிக்கலும் இருக்காது: டாக்டர்கள் தகவல்

    “ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் அதிக குளிரூட்டபட்ட அறையில் ராம்குமார் உடல் வைக்கப்பட்டு உள்ளது. எனவே பிரேத பரிசோதனை செய்வதில் எந்த சிக்கலும் இருக்காது”, என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
    சென்னை:

    சென்னை புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமார் உடல், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டு உள்ளது. ராம்குமார் பிரேத பரிசோதனையில் தனியார் டாக்டர் இடம் பெற வேண்டும் என்று முறையிட்டு ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கால், 30-ந்தேதி வரை பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த 7 நாட்களாக ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை கூடத்தின் தனி அறையில் வைக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு கருதி பிரேத பரிசோதனை கூடத்தை சுற்றிலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    பிரேத பரிசோதனை நடைபெறுவது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், தற்போது புதிதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பிணவறையில் உள்ள ராம்குமார் உடல் சிதைய வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் பிரேத பரிசோதனை செய்யும்போது நிச்சயம் சிக்கல் ஏற்படலாம் என்றும் தகவல் வெளியாகியது.

    இதனை திட்டவட்டமாக மறுத்த டாக்டர்கள், ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் எந்த சிக்கலும் இருக்காது என்று தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து அரசு டாக்டர்கள் கூறியதாவது:-

    இந்த விஷயத்தில் வெளியாகும் எந்த தகவல்களிலும் உண்மை இல்லை. ஏனென்றால் ராம்குமார் உடல் அதிக குளிரூட்டப்பட்ட தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. அந்த அறைக்கு யாரையும் அனுமதிக்கவில்லை. எனவே கிருமிகள் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. இதனால் உடல் தசைகள் சுருங்காமலும், சிதையாமலும் இருக்கும். இன்னும் பல நாட்கள் உடலை பாதுகாக்கும் நவீன வசதிகள் உள்ளன. எனவே பிரேத பரிசோதனை செய்வதில் எந்த சிக்கலும் இருக்காது. எனவே வீணான வதந்திகள் பரப்பாமல் இருப்பது நல்லது.

    இவ்வாறு அரசு டாக்டர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×