search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவுண்ட்டவுன் தொடங்கியது: வானிலை ஆய்வு செயற்கைக்கோளுடன் திங்கட்கிழமை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.-சி35
    X

    கவுண்ட்டவுன் தொடங்கியது: வானிலை ஆய்வு செயற்கைக்கோளுடன் திங்கட்கிழமை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.-சி35

    வானிலை ஆய்வு செயற்கைக் கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி–35 ராக்கெட்டை ஏவுவதற்கான கவுண்ட்டவுன் இன்று தொடங்கியது.
    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடல் மற்றும் வானிலையை துல்லியமாக கண்டறியவும், முன்னறிவிப்பு தொடர்பான ஆய்வுகள், சூறாவளியை கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு சேவைகள், சுற்றுச்சூழலை அறிவது, காற்றின் திசையை அறிந்து கொள்ளவும் 377 கிலோ எடை கொண்ட ‘ஸ்கேட்சாட்–1’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்து உள்ளது.

    சென்னையை அடுத்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி–35 ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோளை 26–ந்தேதி காலை 9.12 மணிக்கு விண்ணில் செலுத்த இஸ்ரோ இறுதி கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது 37–வது ராக்கெட் ஆகும். இந்த ராக்கெட்டை ஏவுவதற்கான 48 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 8.42 மணிக்கு துவங்கியது.

    ஸ்கேட்சாட்–1 செயற்கைக்கோள் பூமியில் இருந்து 720 கிலோ மீட்டர் தூரத்தில் விண்வெளி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும். இதனுடைய ஆயுள்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

    இதனுடன் பி1–சாட், பிரதாம், பாத்பைண்டர்–1, அல்சாட்–1பி, அல்சாட்–2பி, அல்சாட்–1என், கேன்எக்ஸ்–7 ஆகிய செயற்கைகோள்களும் செலுத்தப்படுகிறது. இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அகடமிக் நிறுவனங்களை சேர்ந்த 2 செயற்கைகோள்களும், அல்ஜீரியா, கனடா, அமெரிக்க நாட்டை சேர்ந்த செயற்கைகோள்களும் இவற்றில் அடங்கும்.

    பிரதானமான செயற்கைகோளை (ஸ்கேட்சாட்–1) திட்டமிட்ட சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்திய உடன், ராக்கெட்டின் என்ஜின் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, மீண்டும் இயக்கி மற்றொரு சுற்றுப்பாதையில் செயற்கைகோளை நிலைநிறுத்தும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
    Next Story
    ×