search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா: 7-ந்தேதி தேர்பவனி
    X

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா: 7-ந்தேதி தேர்பவனி

    வேளாங்கண்ணியில் அடுத்த மாதம் 7-ந் தேதி (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்ப்பவனி நடைபெறுகிறது. 8-ந் தேதி(வியாழக்கிழமை) அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயத்துக்கு தினமும் தமிழகம் மட்டு மின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு திருவிழா 29-ந் தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு மாதா உருவம் பொறித்த கொடி, பேராலய முகப்பிலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. தேவாலய வளாகம், கடற்கரை, ஆரிய நாட்டுத்தெரு வழியாக எடுத்து செல்லப்படும் இந்த கொடியை பேராலயத்தின் முன்பு தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார். விழா நாட்களில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப் பலிகள் நிறைவேற்றப்படுகின்றன. மேலும், சிலுவை பாதை வழிபாடு, ஜெபமாலை, நவநாள்ஜெபம், மாதாமன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

    விழாவையொட்டி தினமும் மதியம் 12 மணிக்கு மாதா கொடியேற்றுதலும், இரவு 8 மணிக்கு பேராலய முகப்பிலிருந்து தேர்ப் பவனியும் நடைபெறுகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி(புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்ப்பவனி நடைபெறுகிறது. 8-ந் தேதி(வியாழக்கிழமை) அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப் படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி தற்போது தினமும் ஏராளமான பக்தர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

    Next Story
    ×