search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பங்கூழ்
    X

    உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பங்கூழ்

    கோடை வெயிலை சமாளிக்க கம்பங்கூழை 200 முதல் 250 மில்லி லிட்டர் தினமும் ஒரு வேளை அருந்த உடலுக்கு நன்கு குளிர்ச்சியுண்டாகும்.
    கோடைகாலம் தொடங்கி விட்டது. கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க நாம் செயற்கை குளிர்பானங்களை தேடி செல்கிறோம். செயற்கை குளிர்பானங்களில் பல வகையான வேதிப்பொருட்களும், சாயப்பொருட்களும் நிறைந்துள்ளன. இதை அருந்துவதால் பல் ஈறுகள் தேய்ந்து பல் கூச்சம் ஏற்படுகின்றன. நமது எலும்புகளை தாக்கி அவற்றின் கனிம அடர்த்தியை குறைப்பதுடன் குடற்பகுதிகளில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் அழித்துவிடுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    மேலும் வேதிப்பொருட்களால் ஆன குளிர்பானங்களில் உள்ள நச்சுப்பொருட்கள் அதிக அளவில் உட்கொள்ளப்படும்போது சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றை பாதிப்படைய செய்கின்றன. பல வண்ணங்களில் பல வகையான செயற்கை குளிர்பானங்களுக்கு அடிமையாகிறோம். இயற்கையாக கிடைக்கும் குளிர்பானங்களே உடலுக்கு நன்மை விளைவிக்கின்றன.

    இளநீர், பதனீர், மோர் பல வகையான கூழ்கள், பழச்சாறுகள் ஆகியவற்றை உட்கொள்வதே நலம். இவற்றை அருந்துவதால் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் கிடைப்பதுடன் குடலின் நன்மை செய்யும் பாக்டீரியாக்களும் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன.



    இவற்றில் முதலிடம் வகிப்பது கம்பு என்னும் தானியமாகும். கம்பில் அல்புமின், கார்போஹைட்ரேட், சாம்பல் சத்து, நைட்ரஜன், சிலிகா மற்றும் ஏராளமான நார்ச்சத்துகள் அடங்கியுள்ளன. இவைகள் உடலில் எளிதில் செரிமானத்தை ஏற்படுத்துகின்றன.

    கம்பங்கூழ் தயாரிக்க முதலில் தூசி, கற்கள் இல்லாமல் நன்கு சுத்தம் செய்து அரைமணி நேரம் சுத்தமான நீரில் ஊறவைக்க வேண்டும். பின்னர் நீரை வடித்து 15 நிமிடங்கள் நிழலில் காய வைக்க வேண்டும். அதன்பின்னர் ஆட்டுக்கல் அல்லது மிக்சியில் போட்டு ரவை பக்குவம் வரும்வரை தயாரித்து கொள்ள வேண்டும். இறுதியாக 1 லிட்டர் தண்ணீரில் தயார் செய்த கம்பை கொஞ்சம் நேரம் கொதிக்க விட வேண்டும்.

    கொதித்ததும் கட்டி பிடிக்காதபடி கிளறி அரை மணி நேரம் தீயில் வேகவைத்து கூழ் பதத்தில் எடுக்க வேண்டும். மோரில் சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி போட்டு அத்துடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கம்பங்கூழுடன் கலந்து கூழ் பதத்தில் 200 முதல் 250 மில்லி லிட்டர் தினமும் ஒரு வேளை அருந்த உடலுக்கு நன்கு குளிர்ச்சியுண்டாகும்.

    கம்பை வளரும் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். நன்கு வறுத்து பொடித்து சலித்து அத்துடன் நாட்டுச்சர்க்கரை தேவையான அளவு சேர்த்து கொடுத்தால் குழந்தைகள் சத்துப்பிடித்து வளருவார்கள். சதைப்பற்றும் அதிகரிக்கும்.

    இவ்வாறு பல வகையில் நமக்கு நன்மை விளைவிக்கும் இயற்கை உணவான கம்பங்கூழை அருந்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.
    Next Story
    ×