search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பிரச்சனைகளை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது எப்படி?
    X

    பிரச்சனைகளை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது எப்படி?

    நம் குழந்தைகளுக்கு பிரச்சனை தீர்க்கும் திறனை கற்றுக் கொடுப்பது அவசியம். எப்படி கற்று கொடுக்க வேண்டும் என்பதை கீழே விரிவாக பார்க்கலாம்.
    பெற்றோர்களில் இருவிதம் உண்டு. தங்கள் குழந்தைகளுக்கு எல்லாம் செய்து கொடுத்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பெற்றோர் முதலாவது வகை. முடிந்ததை செய்வோம், மற்றதை அவர்களாகவே அடைய வேண்டியது என்பதை கொள்கையாக வைத்துக் கொண்டு குழந்தைகளை இயன்ற வரை காப்பாற்றும் பெற்றோர் இரண்டாவது வகை.

    இதில் எது சரி என கேட்டால் இரண்டுமே தவறு என்றுதான் சொல்ல வேண்டும். எல்லாவற்றையும் செய்து கொடுத்து பாதுகாப்பாகவே வளர்த்தால் பின்னர் குழந்தைகள் தானாக எதையுமே செய்யும் திறமை இல்லாதவர்களாக வளர்ந்து விடுவர். எதையுமே கண்டு கொள்ளாமல் தானாகவே தெரிந்து கொள்ளட்டும் என விட்டால் எல்லாவற்றிற்கும் பயந்து கொள்பவர்களாக குழந்தைகள் வளர்வர். அதுவும் பிரச்சனைகளை எதிர்கொண்டு தீர்ப்பதில் திறமை இல்லாமல் வளர்வர்.

    பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை வாய்ப்பது அரிது. எல்லோர் வாழ்க்கையுமே பிரச்சனைகளை கொண்டது தான். ஒரு பிரச்சனை தீர்வதற்குள்ளாகவே இன்னொரு பிரச்சனை தோன்றிவிடும். யார் தனக்கு ஏற்படும் பிரச்சனைகளை திறமையாக கையாண்டு அதை தீர்த்து விடுகிறார்களோ அவர்களே வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வதாக கொள்ளப்படுகிறது. எனவே நம் குழந்தைகளுக்கு பிரச்சனை தீர்க்கும் திறனை கற்றுக் கொடுப்பது அவசியம்.

    சிக்கலைத் தீர்க்கும் திறன் ஒருநாளில் உருவாவதில்லை. வாழ்க்கையின் போக்கில் பல ஆண்டுகள் அனுபவத்தின் காரணமாகவே சிக்கலைத் தீர்க்கும் திறன் வளர்ச்சியடைகிறது. இந்த அடிப்படையில் பார்க்கும் போது இது போன்று பத்து நாட்கள் பயிற்சி செய்தால் சிக்கலைத் தீர்க்கும் திறன் வளர்ச்சி அடைந்து விடும் என்பது போன்ற குழந்தைகளுக்கு கற்றுத் தரும் விதமான பயிற்சிகள் உளவியலலில் எதுவுமே இல்லை. எதைக் கற்றுக் கொடுக்கிறோம் என்பதை சொல்லாமல் மறைநிலையில் மட்டுமே பிரச்சனைகளை தீர்க்கும் திறனை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க முடியும்.

    பெற்றோர்கள் தங்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளை தீர்க்க முனையும் போது குழந்தைகளை அருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தங்கள் பெற்றோர் எவ்வாறு பிரச்சனைகளை அணுகுகிறார்கள், என்னென்ன உத்திகளை பயன்படுத்துகிறார்கள், பிரச்சனைகளைத் தீர்க்க முடியாவிட்டால் என்ன செய்கிறார்கள். தேவைப்படும் போது உதவி கேட்டு பிறரை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பனவற்றை குழந்தைகள் பார்த்தும், அருகிலிருந்து கேட்டும் தெரிந்து கொள்வார்கள்.

    இது அவர்கள் படிக்கும் செயல்முறைப் பாடம். வளர வளர பல பிரச்சனைகளை பெற்றோர் தீர்ப்பதைப் பார்க்கும் குழந்தைகள் ஒரு கட்டத்தில் வாழ்க்கையின் எல்லா பிரச்சனைகளையும் எவ்வாறு தீர்ப்பது என்பதை தெரிந்து கொள்வார்கள். ஆனால் பல பெற்றோர்கள், தங்களுக்கு பிரச்சனை ஏற்படும் போது குழந்தைகள் அருகில் இல்லாதவாறு பார்த்துக் கொள்கிறார்கள். பிரச்சனைகளினால் குழந்தைகளின் மனம் பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணமே இதற்குக் காரணம். இவ்வாறு குழந்தைகளை பிர்ச்சனைக்குரிய சூழ்நிலைகளில் இருந்து அப்புறப்படுத்துவது அவர்கள் பிற்காலத்தில் பிரச்சனைகளைக் கண்டாலே ஓடி ஒளியும் நிலைக்கு அடிகோலும்.

    ஒருசில குழந்தைகள் எவ்வளவு கற்றுக் கொண்டாலும் தனியாக ஒரு பிரச்சனையைத் தீர்க்கும் நிலை ஏற்பட்டால் தவிப்பிற்குள்ளாகிவிடுவர். அது போன்ற நிலை தங்கள் குழந்தைகளிடம் நிலவுவதாக பெற்றோர் நினைத்தால் அக்குழந்தைக்கு அருகிலேயே இருந்து பிரச்சனைகளை தீர்க்குமாறு தைரியம் அளிக்க வேண்டும்.

    அச்சமயத்தில் எல்லா உதவிகளையும், மனரீதியான ஆதரவினையும் அளிக்க வேண்டும். ஓரிரு முறை பெற்றோரின் உதவியோடு சிக்கலைத் தீர்ப்பதில் வெற்றி காணும் குழந்தை தன்னால் சிக்கலைத் தீர்த்து விட முடியும் என்ற மன தைரியத்தை வளர்த்துக் கொள்ளும். விரைவிலேயே தனியாக பிரச்சனைகளை எதிர் கொள்ளும் திறமை அக்குழந்தையிடம் தோன்றி விடும்.
    Next Story
    ×