search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அட்சய திருதி உருவான கதை
    X

    அட்சய திருதி உருவான கதை

    மகாவிஷ்ணு தரிசனம் அளித்த நாள் திரிதியை அன்று செய்யும் தான தருமங்கள் அளவற்ற பலனைக் கொடுக்கும் என்பதால், அன்று முதல் அந்த திரிதியை நாளை அட்சய திரிதியை என்று அழைத்தனர்.
    வைகாசி மாதத்தில் நீர்தானம் செய்யாத அரசன் ஒருவனுடைய வரலாறு வியப்பூட்டும் வண்ணம் இருக்கிறது. பாஞ்சால நாட்டில் பூரியசஸ் என்ற அரசன் இருந்தான். அவனுடைய நாடு திடீரென சோபை இழந்து துர் தசையை அடைந்தது. சேனைகள் நோயால் சேதமாயின.

    வேற்று நாட்டு அரசன் போரிட்டு நாட்டைக் கைப்பற்றிக் கொண்டு பூரியசஸ், அவனுடைய மனைவி சிகிநீ இருவரையும் நாட்டை விட்டுத் துரத்தி விட்டான். காட்டிற்குச் சென்ற மன்னனும்- ராணியும் முப்பது ஆண்டுகள் சிரமப்பட்டனர். அந்த சமயம் மன்னன் தன் குருவின் நினைவாகவே இருந்தான்.

    அப்போது தற்செயலாக அந்த வழியே யாஜகர், உபயாகர் ஆகிய ஞானோத்தமர்கள் செல்லும்போது, பூரியசஸ் அவர்களைப் பார்த்து பரவசமாகி, அவர்களுடைய பாதங்களில் விழுந்து வணங்கி தன் நிலையைச் சொன்னான். மன்னனின் நிலை கண்டு மனம் இரங்கிய தபோதனர்கள், அவன் இந்த நிலையை அடைவதற்கு என்ன காரணம் என்று ஞானதிருஷ்டியினால் அறிந்து மன்னனிடம் சொன்னார்கள்.

    “அரசே, நீ பத்து தலைமுறைகள் வேடனாக இருந்தாய். பத்தாவது பிறவியில் கெளட தேசத்திக் காட்டில் வசிக்கும் போது, அந்த வழியாகச் செல்வோரின் பொருட்களை அபகரித்தும், சாதுக்களை அவமதித்தும் பல கொடுமைகளைச் செய்து வந்தாய் அதன் பயனைத்தான் இப்போது நீ அனுபவிக்கிறாய்” என்றனர்.

    அதைக் கேட்டு வேதனையுற்ற பூரியசஸ், “தபோதனர்களே, இவ்வளவு கொடுமை செய்திருந்தும் நான் அரசனாக எப்படிப் பிறந்தேன்?” என்று கேட்டான். அதற்கு தபசிகள், “மன்னா! ஒரு சமயம் இரண்டு வைசியர்களும், ஒரு அந்தணரும் இந்தக் காட்டு வழியே செல்லும் போது நீ அவர்களை அடித்துத் துன்புறுத்தினாய் அவர்களுடைய தனங்களைக் கொய்ய நீ முயற்சித்த போது, அந்தணன் தனங்களோடு ஓடிவிட்டார்.



    வைசியர்கள் இறந்துவிட்டனர். நீ அந்தணரைத் துரத்திக் கொண்டு ஓடும்போது, அந்தணர் கீழே விழுந்து மூர்ச்சை அடைந்தார். பொருள் மேல் உள்ள ஆசையால் நீ அந்த அந்தணரைத் தூக்கி நீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி, “பொருளையெல்லாம் எங்கே மறைத்து வைத் திருக்கிறாய்?’ நீ அந்தணனுக்குக் கொடுத்த நீரினால் அவர் மயக்கம் தெளிந்தார். உன்னை அறியாமலேயே உன்னுடைய காரியத்திற்காககச் செய்த நீர் தானம் வைகாசி மாதத்தில் நடந்தது. அந்த புண்ணியத்தினால் நீ அரசைனாகப் பிறந்தாய்” என்று முடித்தனர்.

    வைகாசி மாதத்தில் அறிந்தோ அறியாமலோ செய்யும் சிறிது நீர் தானத்திற்கு இவ்வளவு மகிமையா என்று வியந்த அரசன் தன் முற்பிறவிகளை நினைத்து மனம் நொந்து, காட்டில் வசித்தபடியே ஸ்ரீ ஹரியைத் தியானம் செய்து, வெயிலில் வருவோருக்கு நீழல் கொடுத்து, நீர் தானமும் அளித்து நல்ல செயல்களைச் செய்து வந்தான்.

    சில நாட்களில் மன்னனின் உறவினர்கள் அவனைத் தேடி வந்து அவனுக்குத் துணை புரிவதா¡கக் கூறினர். அவனது அரசும் அவனை அடைந்தது. மன்னனும் பலகாலம் நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்து, ஐந்து புதல்வர்களைப் பெற்று இன்பமாக இருந்து வரும்போது ஸ்ரீ நாராயணனே தரிசனம் அளித்தார்.

    “மன்னா, என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். “இறைவா! உங்களிடம் மாறாத பக்தியும் நாராயண நாமத்தைத் தவிர வேறு எதுவும் உச்சரிக்காத நாவும் வேண்டும்” என்றான். ஸ்ரீ நாராயணன் மன்னன் வேண்டியபடியே வரம் தந்து மறைந்தார்.

    பூரியசஸ் மன்னனுக்கு மகாவிஷ்ணு தரிசனம் அளித்த நாள் திரிதியை அன்று செய்யும் தான தருமங்கள் அளவற்ற பலனைக் கொடுக்கும் என்பதால், அன்று முதல் அந்த திரிதியை நாளை அட்சய திரிதியை என்று அழைத்தனர். புராணங்களை ஒட்டியே இன்றும் ஸ்ரீராம நவமி, புது வருடப் பிறப்பு, அட்சய திரிதியை போன்ற புண்ணிய தினங்களில் பானகம், நீர் மோர் அளிப்பது நடந்து வருகிறது.
    Next Story
    ×