search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராஜகோபாலசுவாமி கோவிலில் தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.(உள்படம்: ருக்மணி, சத்யபாமாவுடன் ராஜகோபாலசுவாமி).
    X
    ராஜகோபாலசுவாமி கோவிலில் தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.(உள்படம்: ருக்மணி, சத்யபாமாவுடன் ராஜகோபாலசுவாமி).

    ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம்

    பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    பாளையங்கோட்டை வேதநாராயணர், அழகியமன்னார், ராஜகோபால சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஐந்தாம் திருவிழாவான கடந்த 5-ந் தேதி காலை வேதநாராயணர், வேதவல்லி, குமுதவல்லி தாயாருக்கும், அழகியமன்னார், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கும், ராஜகோபால சுவாமி, ருக்மணி, சத்யபாமா தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. அன்று இரவில் கருட வாகனத்தில் ராஜகோபால், அழகியமன்னார் வீதியுலா நடந்தது.

    7-ந் தேதி மேலமாட வீதியில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு திருமஞ்சனமும், மாலை மஞ்சள் நீராட்டும் நடைபெற்றது. தொடர்ந்து ராஜகோபால சுவாமி, ருக்மணி, சத்யபாமா தாயாருடன் இந்திர விமானத்திலும், இரவு 8 மணிக்கு புன்னைமர வாகனத்திலும் வீதியுலா நடந்தது.

    நேற்று முன்தினம் இரவில் சுவாமி தேர் பார்வையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. பெரிய தேர் பழுதடைந்து உள்ளதால் சின்ன தேரில் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு ராஜகோபால சுவாமியுடன் ருக்மணி, சத்யபாமா தாயாரும் தேருக்கு எழுந்தருளினார்கள். காலை 9.15 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

    இதைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளையும் சுற்றி மீண்டும் நிலையை வந்தடைந்தது. இரவில் சுவாமி தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலத்தில் பல்லக்கில் விதியுலா நடந்தது.

    இன்று(செவ்வாய்க்கிழமை)காலை 7 மணிக்கு சுவாமி தீர்த்தவாரிக்கு எழுந்தருளி தாமிரபரணி ஆற்றுக்கு செல்கிறார். அங்கு தீர்த்தவாரி நடக்கிறது. இரவில் சப்தாவரணத்தில் அழகியமன்னார், ராஜகோபால சுவாமி விதியுலாவுடன் திருவிழா நிறைவடைகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெயராமன், தக்கார் அய்யர் சிவமணி மற்றும் பக்தர்கள் செய்து உள்ளனர்.
    Next Story
    ×