search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    யுகாதி பண்டிகையையொட்டி வீரக்குமாரர்கள் கத்திபோட்டப்படி ஊர்வலமாக சென்ற போது எடுத்தபடம்.
    X
    யுகாதி பண்டிகையையொட்டி வீரக்குமாரர்கள் கத்திபோட்டப்படி ஊர்வலமாக சென்ற போது எடுத்தபடம்.

    யுகாதி பண்டிகையையொட்டி வீரக்குமாரர்கள் உடலில் கத்திபோட்டு ஊர்வலம்

    சேலத்தில் யுகாதி பண்டிகையையொட்டி (தெலுங்கு வருடப்பிறப்பு) வீரக்குமாரர்கள் உடலில் கத்திப்போட்டு ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.
    தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகை இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று சேலம் பொன்னம்மாபேட்டை ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கோவிலில் சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.

    அப்போது பெண்கள் திருமஞ்சனமும், வீரக்குமாரர்கள் அலகு சேவையுடன் கத்திபோடும் நிகழ்ச்சியும் நடந்தது. வீரக்குமாரர்கள் உடலில் மஞ்சள் பொடியை பூசியபடி மார்பில் கத்திபோட்டு ரத்தம் சிந்த, அம்மனை அழைத்துக்கொண்டு (சக்தி அழைப்பு) ஊர்வலமாக சென்றனர்.

    இந்த ஊர்வலம் வாய்க்கால் பட்டறை, ராமமூர்த்தி புதூர், சின்னம்மாபேட்டை, சொட்டையன் தெரு, நரசிம்மன் கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கோவிலை சென்றடைந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

    இதேபோல் யுகாதி பண்டிகையையொட்டி சேலம் டவுன் போலீஸ் நிலையம் அருகில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். மேலும் பல்வேறு கோவில்களிலும் யுகாதி பண்டிகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
    Next Story
    ×