search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நேற்று நடைபெற்ற பாடைக்காவடி திருவிழாவில் பக்தர்கள் பாடையில் படுத்து நேர்த்திக்கடன் செலுத்திய காட்சி.
    X
    நேற்று நடைபெற்ற பாடைக்காவடி திருவிழாவில் பக்தர்கள் பாடையில் படுத்து நேர்த்திக்கடன் செலுத்திய காட்சி.

    வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் பாடைக்காவடி திருவிழா

    திருவாரூர் வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலில் பாடைக்காவடி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் குடமுருட்டி ஆற்றங்கரையில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பாடைக்காவடி திருவிழா கடந்த 10-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. கடந்த 12-ந் தேதி முதல் காப்பும், 19-ந் தேதி 2-ம் காப்பும் கட்டப்பட்டது.

    நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் அடைய மகாமாரியம்மனை வேண்டி கொள்வர். பின்னர் நோயில் இருந்து குணமடைந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து பச்சை மூங்கில் பாடை அமைத்து அதில் அவர் படுத்துகொள்வார். அந்த பாடையை அவரது உறவினர்கள் தூக்கி கொண்டு கோவிலை 3 முறை வலம் வருவார்கள். இதுவே பாடைக் காவடி திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாடைக்காவடி திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி குடமுருட்டி ஆற்றில் இருந்து அதிகாலை முதல் பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பாடைக்காவடி, தொட்டில் காவடிகளை அதிகளவு எடுத்து வந்தனர். இதை தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடை பெற்றது.



    மாலையில் அம்மன் வெள்ளி அன்னவாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. அப்போது செம்மறி ஆடு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் கோவிலின் எதிர்புறம் அமைக்கப்பட்டிருந்த செடில் மரத்தில் ஆட்டை ஏற்றி 3 முறை வலம் வந்து செடில் திருவிழா நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் குணசேகரன் உள்பட ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் பெரியார் (வலங்கைமான்), ரமேஷ் (கபிஸ்தலம்) மற்றும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கிளை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், திருவையாறு, மன்னார்குடி, மயிலாடுதுறை, கும்பகோணம், ஜெயங்கொண்டம் ஆகிய மார்க்கங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை உத்தரவின்படி, உதவி ஆணையர் சிவராம்குமார் தலைமையில், கோவில் செயல் அலுவலர் சிவக்குமார், ஆய்வாளர் தமிழ்மணி, மேலாளர் தமிழ்ச்செல்வன், பேரூராட்சி செயல் அலுவலர் சமயச்சந்திரன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×