search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மயானக்கொள்ளை விழாவில் அங்காளபரமேஸ்வரி, மற்றும் பாவாடைராயன் சாமிகள் வீதி உலா சென்ற போது எடுத்த படம்.
    X
    மயானக்கொள்ளை விழாவில் அங்காளபரமேஸ்வரி, மற்றும் பாவாடைராயன் சாமிகள் வீதி உலா சென்ற போது எடுத்த படம்.

    கடலூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா

    கடலூர் அங்காள பரமேஸ்வரி அம்மன்கோவிலில் மயானக்கொள்ளை விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கடலூர் வண்டிப்பாளையம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா கடந்த 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் வீதியுலா நடைபெற்றது. மூன்று முக இருளகண்டனுடன் வீதியுலா, பூவாலை கப்பரையுடன் வீதியுலா, அக்னி கரகத்துடன் அன்னவாகனத்தில் வீதியுலா நடந்தது.

    கடந்த 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரவு 7 மணிக்கு அம்பாள் சிம்ம வாகனத்திலும், தாண்டவராயர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி பாரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று முன்தினம் அம்மன் குறத்தி வேடம் பூண்டு மயானம் சென்று மாலை 6 மணிக்கு வல்லாளக்கண்டன் கோட்டை அழித்தல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு பூத வாகனத்தில் அம்மன் வீதியுலா காட்சியும் நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயானக்கொள்ளை விழா நேற்று நடந்தது. இதையொட்டி அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. மதியம் 1.30 மணிக்கு அம்மன் பூத வாகனத்தில் எழுந்தருளினார். அதையடுத்து அங்காளபரமேஸ்வரி மற்றும் பாவாடைராயன் சாமிகள் புறப்பாடு நடைபெற்று, கடலூர் ஜவான்பவன் சாலையில் உள்ள மயானத்தை சென்றடைந்தது. அங்கு மேள, தாளங்கள் முழங்க மயானக்கொள்ளை விழா நடந்தது. இதில் பக்தர்கள் காணிக்கையை அம்மன் மீது வாரி இறைத்தனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு மஞ்சள் விடையாற்றி உற்சவம், நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியை இறக்கி கும்பம் இடுதல் நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் நாகராஜன் தலைமையில் குப்புராஜ், பழனி, ராஜேந்திரன், ராஜசேகரன், கூத்தான், வேலு மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×